யாழ். கல்லுண்டாயில் சுழல் காற்று; 9 வீடுகளுக்கு சேதம்

யாழ். கல்லுண்டாயில் இன்று வீசிய சுழல்காற்று காரணமாக 9 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

இன்று(6) பிற்பகல் 1 மணியளவில் வீசிய சுழல் காற்றினால் குறித்த வீடுகள் சேதமடைந்துள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவி பணிப்பாளர் சூரியராஜ் தெரிவித்தார்.

யாழ். சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கல்லுண்டாய் ஜே – 136 நவாலி தெற்கு கிராம சேவகர் பிரிவில் இச்சுழல் காற்றின் தாக்கம் காரணமாக 9 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதோடு 12 குடும்பங்களைச் சேர்ந்த 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவினரால் தெரிவிக்கப்படுகிறது.

இப்பகுதியில் மழை பொழிந்த நேரம் திடீரென வீசிய காற்று காரணமாக வீட்டின் ஓடுகள், கூரைத்தகடுகள் தூக்கி வீசப்பட்டதாகவும் வீட்டிலிருந்தோர் பாதுகாப்புத் தேடி ஓடியதாகவும் எனினும் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் அங்கிருந்த உடைமைகள் யாவும் நீரில் நனைந்து சேதமடைந்ததாகவும் அறிய வருகிறது.

பாதிக்கப்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்கு அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் தற்காலிகமாக தறப்பாள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.