சிறிலங்கா வந்துள்ள சுற்றுலாப்பயணிகள் விதிமுறைகளை மீறுகின்றனர்

ரஸ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்கவின் ஏற்பாட்டில் இலங்கைக்கு சுற்றுலாப்பயணம் மேற்கொண்டுள்ளவர்கள் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை மீறியுள்ளனர் என ஆங்கிலவாரஇதழ் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கு முன்னர் இலங்கை சுற்றுலாப்பயண அதிகார சபையின் செய்துகொண்ட இணக்கப்பாட்டினை உக்ரைனின் சுற்றுலாகுழுவினர் மீறியுள்ளனர் என ஆங்கிலவார இதழ் தெரிவித்துள்ளது.

டிசம்பர் 28 ம் திகதி மத்தல விமானநிலையம் வந்த உக்ரைன் சுற்றுலாப்பயணிகள் கொரோனா வைரஸ் பரிசோதனைகளின் பின்னர் தங்கள் சுற்றுலாப்பயணத்தினை ஆரம்பித்துள்ளனர்.ஐந்து நாட்கள் கூட அவர்கள் தனிமைப்படு;த்தலில் இருக்கவில்லை உக்ரைன் கொரோனா வைரஸ் ஆபத்து அதிகம் காணப்படும் நாடுகளில் ஒன்று எனவும் ஆங்கிலவார இதழ் தெரிவித்துள்ளது.

உக்ரைன் சுற்றுலாப்பயணிகள் தொடர்பான விபரங்களை முன்னாள் தூதுவரே கையாள்கின்றார், சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் அவருடன் தொடர்புகளை பேணுகின்றனர் என தெரிவித்துள்ள ஆங்கில வார இதழ் முன்னாள் தூதுவர் உத்தியோக பூர்வ பதவிகள் எதனையும் வகிக்காததையும் சுட்டிக்காட்டியுள்ளது.

முதலாவது குழுவினர் சிறிய குழுக்களாக பிரிக்கப்பட்டு பேருந்தில் ஏற்றப்பட்டு முன்னரே தீர்மானிக்கப்பட்ட இடங்களிற்கு அழைத்துச்செல்லப்பட்டனர் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபைக்கு இந்த ஏற்பாடுகள் குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை எனவும் செய்தி வெளியாகியுள்ளது.

சுற்றுலாப்பயணத்தினை ஏற்பாடு செய்தவர்கள் குறிப்பிட்ட பகுதிகளிற்கு விஜயம் மேற்கொள்ளும்போது இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையுடன் இணைந்து செயற்படவேண்டும்,என முன்கூட்டியயே இணக்கப்பாடு எட்டப்பட்டது,

வாகனச்சாரதிகள், சுற்றுலா வழிகாட்டிகள், மற்றும் உதவியாளர்களை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையை தெரிவு செய்யும் எனவும் இணக்கப்பாடு எட்டப்பட்டது.

எனினும் யால தேசிய பூங்காவில் திட்டமிட்டபடி சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அதிகார சபையுடன் தொடர்புகொள்ளாமல் சுற்றுலாப்பயண ஏற்பட்டாளர்கள் தாங்களாகவே 28 வாகனங்களை ஏற்பாடு செய்துள்ளனர். அதேபோன்று ஏற்கனவே திட்டமிடப்பட்டிரா படகுப்பயணங்களையும் மேற்கொண்டுள்ளனர்.

உக்ரைன் சுற்றுலாப்பயணிகளை யாலா தேசிய பூங்காவிற்குள் கொண்டு செல்வதற்கு மறுத்துள்ள சாரதியொருவர் தான் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாகவே மறுப்பு தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அந்த சாரதி சுற்றுலாப்பயணங்களை ஏற்பாடு செய்தவர்கள் அதிக பணம் கொடுத்ததால் ஏனைய சாரதிகள் அவர்களை அழைத்துச்சென்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்த சுற்றுலாப்பயணிகள் தங்கியுள்ள ஹோட்டல்கள் தங்கள் கட்டணங்களை குறைக்கவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.