சித்ரா வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்யவில்லை

சித்ரா வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்யவில்லை என ஆர்டிஓ விசாரணை அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த 9-ம் தேதி பூந்தமல்லி அருகே உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக நசரத்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் அடிப்படையில், சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் ஹேம்நாத் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை கடந்த டிச.14-ந் தேதி கைது செய்தனர்.
பின்னர் இது தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ திவ்யஸ்ரீ கடந்த 14ஆம் தேதி முதல் விசாரணையில் ஈடுபட்டு வந்தார். முதல் நாள் விசாரணையில் சித்ராவின் பெற்றோர், சகோதரர், சகோதரி ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். தொடர்ந்து, ஹேம்நாத்திடமும், அவரின் பெற்றோரிடமும் விசாரணை நடத்தினார்.
சித்ரா

சித்ராவுடன் சீரியலில் நடித்த நடிகர்- நடிகைகள், சித்ரா மற்றும் ஹேம்நாத்தின் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் உள்பட 15 பேரிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டது. பின்னர் ஆர்டிஓ திவ்யஸ்ரீ தனது விசாரணை அறிக்கையை பூவிருந்தவல்லி உதவி ஆணையர் சுதர்சனத்திடம் ஒப்படைத்தார்.
விசாரணை அறிக்கையில் சித்ரா வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்யவில்லை என கூறப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.