யாழ்.முதல்வர் வேட்பாளராக ஆர்னோல்ட் தவிர்ந்த வேறு ஒருவரை ஆதரிக்கத் தயார்

யாழ். மாநகரசபை முதல்வர் வேட்பாளராக இம்மானுவேல் ஆர்னோல்ட் தவிர்ந்த வேறு ஒருவரைத் தமிழ் தேசிய கூட்டமைப்பு நிறுத்தினால் அவரை ஆதரிக்க தமது கட்சி தயாராக இருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

நல்லூர் பிரதேச சபைக்கும் புதிய ஒரு வேட்பாளரை நியமித்தால், அவரையும் ஆதரிக்கத் தயார் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

நேற்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண அலுவலகத்தில் அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை அறிவித்தார்.

“யாழ் மாநகரசபை முதல்வருக்கு ஆர்னோல்ட்டைத் தவிர்ந்த இன்னொருவரையும், நல்லூர் பிரதேசசபையின் தவிசாளருக்கு தியாகமூர்த்தி தவிர்ந்த இன்னொருவரையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளராக அறிவித்தால் அவர்களை ஆதரிக்கத் தமிμ தேசிய மக்கள் முன்னணி தயாராக இருக்கிறது.

அதேநேரம் இரண்டு சபைகளிலும் பழைய – பதவி விலகிய – ஆர்னோல்ட், தியாகமூர்த்தி இருவரையுமே வேட்பாளர்களாக நிறுத்தினால் தமிழ் தேசிய மக்கள் முன்னணி அவர்களை எதிர்க்கும். அதேநேரம், எமது எதிர்ப்பையும் மீறி அவர்கள் வெற்றிபெற்று,  ஆட்சியமைத்தாலும், அவர்கள் சமர்ப்பிக்கும் வரவு – செலவு திட்டத்தையும்
எதிர்ப்போம்.

இதன்மூலம், இரண்டு சபைகளும் கலையும் நிலைமை ஏற்பட்டால், அதற்கான பொறுப்பை தமிழ் தேசிய கூட்டமைப்பே ஏற்றுக்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.