வவுனியாவிலிருந்து பிரான்ஸ் சென்ற இரு இளைஞர்கள் எங்கே?

வவுனியாவில் இருந்து பிரான்ஸ் நாட்டிற்கு சென்ற இளைஞர்கள் இருவர் காணாமல் போயுள்ளனர் என வவுனியாவில் உள்ள அவர்களது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

வவுனியா கோதண்டர் நொச்சிகுளம் மற்றும் குருமன்காடு பகுதிகளைச் சேர்ந்த இருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர். இந்த இளைஞர்கள் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் பிரான்ஸ் நாட்டுக்குச் செல்வதற்காக முகவர் ஒருவரூடாக இலங்கையில் இருந்து பயணித்துள்ளனர். அவர்கள் ஆபிரிக்காவின் பல்வேறு நாடுகளில் தங்கியிருந்த போது வவுனியாவில் உள்ள அவர்களது குடும்பத்தினருடன் தொடர்பை ஏற்படுத்தி கதைத்து வந் துள்ளனர்.

கோதண்டர் நொச்சிகுளத்தைச் சேர்ந்த மகேந்திரன் கவிஞன் (வயது-23) என்ற இளைஞர் இறுதியாக இம்மாதம் 3 ஆம் திகதி தனது குடும்பத்தினருடன் கதைத்துள்ளார். அதன் பிறகு அவருடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

வவுனியா குருமன்காட்டைச் சேர்ந்த பிரசன்னா (வயது-27) என்ற இளைஞரது தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளதாக அவர்களது உறவினர்கள் தெரிவித்தனர். இதேவேளை, கடந்த வாரமளவில் மொரோக்கோவில் இருந்து ஸ்பெயின் நோக்கிப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கடலில் மூழ்கியதில் சிலர் உயிரிழந்தனர் என அந்தப் படகில் பயணித்து தப்பிய இளைஞர் ஒருவர் காணா மற்போன இளைஞனின் உறவினர் ஒருவருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

அந்தப் படகில் வவுனியாவில் இருந்து பயணித்த சிலரும் இருந்தனர் என அவர் கூறினார். இந்த விடயம் தொடர்பாகவும் வவுனியாவில் உள்ள இரு இளைஞர்களின் குடும்பத்தினருக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.