ரஜினியின் அபூர்வ புகைப்படத்தை பகிர்ந்த ஐஸ்வர்யா

நேற்று 70-வது பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் ரஜினிகாந்தின் அபூர்வ புகைப்படத்தை அவரது மகள் ஐஸ்வர்யா பகிர்ந்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் நேற்று 70-வது பிறந்தநாளை கொண்டாடினார். நேற்று முன்தினம் இரவு அவர் தனது குடும்பத்தினருடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டத்தை தொடங்கினார். அவர் வெட்டிய கேக் விசே‌ஷமாக வடிவமைக்கப் பட்டு இருந்தது. அதில் ‘‘இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை’’ என்ற வாசகம் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. அந்த கேக்கை வெட்டி குடும்பத் தினர் அனைவருக்கும் ரஜினி வழங்கினார்.
ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு சமூக வலைதளங்களில் ஏராளமானோர் விதம் விதமாக வாழ்த்து செய்திகளை பகிர்ந்தனர். அதில், ‘ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா சமூக வலைதளங்களில் தனது தந்தையின் அபூர்வ புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருந்தார். பழமையான கார் ஒன்றின் அருகில் ரஜினி குர்தா அணிந்து அந்த படத்தில் காட்சி அளித்தார். இந்த கார் தான் ரஜினி வாங்கிய முதல் கார் ஆகும். இன்று ரஜினியிடம் பல நவீன சொகுசு கார்கள் இருந்தாலும் அந்த முதல் காரை இன்றும் அவர் பாதுகாத்து வருகிறார்.
ஐஸ்வர்யா தனுஷ் பகிர்ந்த ரஜினியின் புகைப்படம்
ரஜினி வந்த பாதையை மறக்காதவர். பழமையை என்றும் தனது நினைவில் கொண்டிருப்பவர். பழமை காலத்தில் தன்னோடு இருந்தவர்களை மதிப்பவர் என்பதை உணர்த்தும் வகையில் அந்த படம் அமைந்திருந்தது. ஐஸ்வர்யா வெளியிட்ட அந்த படத்தை பல்லாயிரக் கணக்கானோர் மறுபதிவாக வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.