சஹ்ரானின் போதனைகளுக்கு சென்ற 21 பேர் கைது

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதலின் சூத்திரதாரியான சஹ்ரானின் அடிப்படைவாத போதனைகளில் பங்கேற்ற மற்றும் தற்கொலை குண்டுத் தாக்குதலுக்குப் பயிற்சி பெற்றதாக சந்தேகிக்கப்படும் 6 பெண்கள் உட்பட 21 பேரை, காத்தான்குடி பிரதேசத்தில் வைத்து பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பயங்கரவாத தடுப்புப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், காத்தான்குடி பிரதேசத்தில் சஹ்ரானுடன் தொடர்பை பேணிவந்த 20 வயதுடைய இளைஞர் ஒருவர் அண்மையில்  கைது செய்யப்பட்டார்.

கைதுசெய்யப்பட்ட இளைஞரிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் மேலும் சஹ்ரானின் பயிற்சி முகாமில் பயிற்சி பெற்ற மற்றும் அவர்களுடன் தொடர்பை பேணிவந்த காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 15 ஆண்களும் 6 பெண்களுமாக 21  பேரை கடந்த 4ஆம் திகதி கைதுசெய்துள்ளதாகவும்  அவர்கள் அனைவரும் பயங்கரவாத சட்டத்தின் கீழ் தடுத்துவைத்து விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும், அவர் தெரிவித்தார்.

இதேவேளை, சீயோன் தேவாலய உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுதாரியின் தாயார் உட்பட 4 பேரையும் டிசெம்பர் மாதம் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, Zoom தொழில்நுட்பத்தின் ஊடாக மட்டக்களப்பு நீதவான் நீதமன்ற நீதவான் ஏ.சி.ஏ. றிஸ்வான், நேற்று (07) உத்தரவிட்டார்.