வடமராட்சியில் குளத்தில் விழுந்து மாணவன் பலி

யாழ். வடமராட்சி நுணுவில் பிள்ளையார் கோவில் குளத்தில் காணப்பட்ட கழிவுகளை அகற்றி சுத்தப்படுத்திய இளைஞர் குழு ஒன்றில் இடம்பெற்றிருந்த மாணவன் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றதாக நெல்லியடி காவல் துறை தெரிவித்தனர்.

சம்பவத்தில் கரவெட்டி கிழக்கைச் சேர்ந்த தேவராஜா லக்சன் (வயது -18) என்ற நெல்லியடி மத்திய கல்லூரியில் உயர்தரத்தில் கற்கும்  மாணவனே இவ்வாறு உயிரிழந்தார்.

தாய் தந்தை இல்லாத நிலையில் சகோதரியுடன் வசித்து வந்துள்ள இவர் வடமராட்சி நுணுவில் பிள்ளையார் கோவில் குளத்தில் காணப்பட்ட போத்தல் உள்ளிட்ட கழிவுகளை நண்பர்களுடன் இணைந்து அகற்றிய போது நிலைதடுமாறி உள்ளே விழுந்தார் என்றும் அருகில் நின்ற நண்பர்கள் அவரைக் காப்பாற்ற கையைப் பற்றிய போது அவர்களும் உள்ளே விழக்கூடிய அபாயம் இருந்ததால் அவர்கள் கையை விட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மாணவனின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக பருத்தித்துறை – மந்திகை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.