14-ந்திகதி பௌர்ணமி நிலவை விட 30 மடங்கு அதிக வெளிச்சத்தில் தோன்றும் நிலவு

பௌர்ணமி நிலவை விட 30 மடங்கு அதிக வெளிச்சத்தில் தோன்றும் நிலவை வருகிற 14- ந்திகதி அனைவரும் காணலாம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த அரிய காட்சி தெரியும்.

இது குறித்து சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

‘சூப்பர் மூன்’ எனப்படுவது பூமிக்கு மிக அருகில் நிலவானது காட்சியளிப்பதாகும். அந்த நேரத்தில் நிலவானது மிகவும் பிரகாசமாகவும், மிகப்பெரியதாகவும் தோற்றமளிக்கும். இந்த நிகழ்வானது 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடப்பதாகும். இந்த ‘சூப்பர் மூன்’ கடந்த 1948- ம் ஆண்டு தோன்றியது. அதனைத்தொடர்ந்து தற்போது அனைவருக்கும் காட்சியளிக்க உள்ளது.

நிலவானது பூமியில் இருந்து 3 லட்சத்து 84 ஆயிரத்து 400 கிலோமீட்டர் தொலைவில் சுற்றி வருகிறது. இந்த பூமியை சுற்றிவரும் நிலவானது குறிப்பிட்ட நீள்வட்டப்பாதையில் செல்லாமல் அதில் இருந்து விலகி சில நேரங்களில் பூமிக்கு அதன் தொலைவில் இருந்து 48 ஆயிரம் கிலோமீட்டர் அருகில் வந்து செல்லும்.

தற்போது இதே போல் பூமிக்கு மிக அருகாமையில் வருகிற 14-ந் திகதி வந்து கடந்து செல்லும். இந்த ‘சூப்பர் மூன்’ துபாயில் அமீரக நேரப்படி மாலை 5.52 மணிக்கு முழுமையாக காட்சி தர உள்ளது. இந்த காட்சியை துபாயில் வசிக்கும் அனைவரும் காண முடியும். இந்த நிகழ்வு கடந்த 1948-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வந்ததைவிட சிறப்பானதாக இருக்கும்.

வானத்தில் சாதாரணமாக பௌர்ணமி அன்று நிலவை காண்பதை விட பல மடங்கு மிகப்பெரியதாக காட்சியளிக்கும் அந்த நேரத்தில் அதன் வெளிச்சம் 30 மடங்கு அதிகமானதாக இருக்கும். இதற்காக அமீரக விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த காட்சியை பார்க்காமல் தவற விட்டவர்கள், பின்னர் டெலஸ்கோப் மூலமாகவும், கோளரங்க காட்சிகள் மூலமாகவும் காணலாம். இந்த ‘சூப்பர் மூன்’ வானில் எந்த அளவு தெளிவாகவும், பெரிதாகவும் இருக்கும் என்பதை நாசா தற்போது படம் வெளியிட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.