மன்னாரில் இனங்காணப்பட்ட 4 கொரோனா தொற்றாளர்கள் வட மாகாண தொற்று நோய் வைத்தியசாலைக்கு

மன்னார் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை(29) மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகளின் போது 4 நபர்களுக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த நபர்கள் உரிய சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக நேற்று திங்கட்கிழமை மாலை விசேட அம்புலன்ஸ் வண்டி மூலம் கிளிநொச்சியில் அமைந்துள்ள வட மாகாண தொற்று நோய் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களின் 3 பேர் முசலி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள சவேரியார் புரத்தில் மீன் வாடி அமைத்து கடற்றொழிலில் ஈடுபட சிலாபத்திலிருந்து வந்தவர்களாவர்.


இவர்கள் கடந்த 19 ஆம் திகதி சிலாபத்திலிருந்து வருகை தந்து வரையறுக்கப்பட்ட நகர்வு என்ற அடிப்படையில் தமது தொழில் நடவடிக்கைகளுக்கு மாத்திரம் கடலுக்குச் செல்லவும், சமூகத்துக்குள் செல்லாமல் இருக்கவும் அனுமதிக்கப்பட்டு கடற்றொழிலில் ஈடுபட்டு வந்தனர்.
வருகை தந்தவர்களில் 6 பேருக்கு பீ.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அவர்களில் 3 நபர்களுக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.


இவர்களுடன் தொடர்பிலிருந்த, அடிப்படை உதவிகளை மேற்கொண்ட 15 உள்ளூர் வாசிகள் உள்ளடங்கலாக 18 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த மூவரும், இரணை இலுப்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவரும் நேற்றைய தினம் திங்கட்கிழமை(30) மாலை விசேட சுகாதார பாதுகாப்புகளுக்கு மத்தியில் கிளிநொச்சியில் அமைந்துள்ள வட மாகாண தொற்று நோய் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் குறித்த நபர்களுடன் தொடர்புபட்டவர்களையும் அடையாளம் காணும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன.

குறித்த நடவடிக்கைகளின் போது மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன், முசலி பிரதேச செயலாளர், முசலி சுகாதார வைத்திய அதிகாரி, முசலி சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய சுகாதார பரிசோதகர்கள், சிலாவத்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.