அஜித் டோவாலின் கொழும்பு விஜயத்தின் பிரதான நோக்கம் என்ன?

இலங்கையில் இந்தோ — பசுபிக் மூலோபாயத்தை மேம்படுத்துவதற்கு இந்தியா கடுமையாக முயற்சிக்கிறது. முத்தரப்பு கடல்சார் ஒத்துழைப்பு மகாநாட்டுக்காக கடந்த வெள்ளிக்கிழமை இந்தி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் கொழும்புக்கு மேற்கொண்ட விஜயம் இந்தோ — பசுபிக் ஒத்துழைப்புக்கு இலங்கையை நெருக்கமாக கொண்டுவருவதற்கான நோக்கத்தைக் கொண்டதாகும் என்று இந்தியாவின் பிரபலமான இணையத்தள செய்திச் சேவைகளில் ஒன்றான ‘த பிறின்ற் ‘ கூறியிருக்கிறது.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பியோ இலங்கைக்கு வருகைதந்த ஒரு மாத காலத்திற்குள் அஜித் டோவாலின் விஜயம் இடம்பெற்றிருப்பதால் அதற்கு கூடுதல் முக்கியத்துவம் இருக்கிறது. கொழும்பு வந்த பொம்பியோ சீனக் கம்யூனிஸ்ட் கட்சியை ” காட்டுமிராண்டி ” என்றும் வாஷிங்டனை இலங்கையின் நண்பன் என்றும் பங்காளி என்றும் வர்ணித்தார். அவரின் இலங்கை விஜயம் அமெரிக்காவினதும் இந்தியாவினதும் வெளியுறவு அமைச்சர்களும் பாதுகாப்பு அமைச்சர்களும் டில்லியில் நடத்திய 2+2 மகாநாட்டையடுத்து இடம்பெற்றது என்பதும் முக்கியமாக கவனிக்கப்படவேண்டியதாகும் என்று இந்தியாவின் பிரபல்யமான பத்திரிகையாளர்களில் ஒருவரும் அரசியல் ஆய்வாளருமான சேகர் குப்தாவை ஆசிரியராகக் கொண்ட ‘ த பிறின்ற்’ தெரிவித்திரக்கிறது.

சுயாதிபத்தியமுடைய பலம்பொருந்திய இலங்கை உலக அரங்கில் அமெரிக்காவின் வலிமையான மூலோபாயப் பங்காளியாகும். சுதந்திரமான – திறந்த இந்தோ — பசுபிக்கிற்கான கலங்கரை விளக்கமாகவும் இலங்கை விளங்கமுடியும் என்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கொழும்பில் கூறியிருந்தார்.

பிராந்தியத்தில் உள்ள நாடுகள் மீதான சீனாவின் செல்வாக்குப் பிடியை தளர்த்தும் ஒரு முயற்சியாக இந்தோ – பசுபிக் கட்டமைப்புக்குள் முக்கியமான அயல் நாடுகளைக் கொண்டுவருவதற்கு இந்தியா தீவிரமான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது என்று தன்னை அடையாளம் காட்டிக்கொள்ளவேண்டாம் எனக்கேட்டுக்கொண்டபுதுடில்லி உத்தியோகபூர்வ வட்டாரம் ஒன்று ‘த பிறின்ற்’ றுக்கு ஞாயிறன்று கூறியது.

“கடல்சார் பாதுகாப்பு தொடர்பான 4வது முத்தரப்பு மகாநாடு தொடங்கியது. இந்தியா, இலங்கை மற்றும் மாலைதீவு பிராந்தியத்தை பாதகாப்பானதாகவைத்திருப்பதில் அவற்றுக்குரிய பொறுப்புக்களை அங்கீகரித்து செயற்படுகின்றன” என்று மாலேயில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகரகம் ருவிட்டர் பதிவொன்றைச் செய்திருக்கிறது.

டோவாலுக்கு புறம்பாக , இந்த மகாநாட்டில் இலங்கையின பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவும் மாலைதீவு பாதகாப்பு அமைச்சர் மரியா டிடியும் பங்கேற்றனர்.

சனிக்கிழமை முடிவடைந்த முத்தரப்பு மகாநாடு 6 வருட இடைவெளிக்குப் இடம்பெற்றது. இறுதியாக 2014 ஆம்ஆண்டில் நடைபெற்ற மகாநாட்டில் அதிதி நாடுகளாக மொரீஷியஸும் சீஷெல்ஸும் கலந்துகொண்டன.

“தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மட்டத்திலான முத்தரப்பு மகாநாடு இந்து சமுத்திர நாடுகள் மத்தியில் ஒத்துழைப்புக்கான ஒரு பயனுறுதியுடைய மேடையாக பயன்படும்” என்று டோவாலின் விஜயம் பற்றி அறிவித்த இந்திய வெளியுறவு அமைச்சின் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

“இந்தியா முதலில்” கொள்கை

தற்போதைய ஜனாதிபதி சோலீ இப்ராஹிம் அரசாங்கத்தின் கீழ் மாலைதீவு அதன் வெளியுறவுக் கொள்கை அணுகுமுறை ‘இந்தியா முதலில்’ என்ற அடிப்படையில் அமையும் என்று வெளிப்படையாக அறிவித்திருக்கும் அதேவேளை, அத்தகையதொரு உத்தரவாதத்தை கொழும்பிடம் இருந்து இந்தியா பெறுவதென்பது ஒன்றும் சுலபமான காரியம் இல்லை என்று வட்டாரங்கள் கூறின.

இலங்கையின் வெளியுறவுச் செயலாளர் ஜெயநாத் கொலம்பகேயுக்கும் சீனாவின் பிரதி வெளியுறவு அமைச்சர் லுவோ ஷோஹுய்யுக்கும் (இவர் முன்னர் புதுடில்லியில் சீனத் தூதுவராக பணியாற்றியவர்) இடையில் அண்மையில் நடைபெற்ற சந்திப்பொன்றின்போது தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி ஒத்துழைப்புத் திட்டங்களை துரிதப்படு்துவதற்கும் வாணிபம் மற்றும் முதலீடுகளையும் அதிகரிப்பதற்கும் இரு நாடுகளும் தீரமானித்தன என்று இலங்கை வெளியுறவு அமைச்சு அறிக்கையொன்றில் தெரிவித்திருந்தது.

மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த அம்பாந்தோட்டை துறைமுகத்தை சுற்றியுள்ள செயற்திட்டங்களை துரிதப்படுத்தகின்ற அதேவேளை, சுதந்திர வர்த்தக வலயத்துக்கான பேச்சுவார்த்தைகளை புதுப்பிப்பதற்கும் இலங்கையும் எனவும் தீர்மானித்திருப்பதாக நம்பப்படுகிறது என்று வட்டாரங்கள் கூறின.

அதேவேளை, ஜப்பானுடன் கூடடாக அபிவிருத்த செயவதற்கு இந்தியா திட்டமிடுகின்ற 50 கோடி டொலர்கள் பெறுமதியான கொழும்பு துறைமுக கிழக்கு கொள்வனவு முனைய அபிவிருத்தி திட்டம் தொடர்ந்து முட்டுக்கட்டை நிலையில்தொடர்ந்தும் இருக்கிறது.