பேர்த்தில் சிறப்பாக நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு – 2020

மேற்கு அவுஸ்திரேலியா மாநிலத்தில் பேர்த்தில் மாவீரர் நாள் நிகழ்வு 27-11-2020 அன்று வெள்ளிக்கிழமை சிறப்பாக நினைவுகூரப்பட்டுள்ளது. கோவிட் 19 பாதுகாப்பு ஏற்பாடுகள் அறிவித்தல்களுடன் மாவீரர் நாள் பிரதான நிகழ்வுகளை திரு. நிமலகரன் அவர்கள் தொகுத்து வழங்கினார். தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் 2008ம் ஆண்டு மாவீரர் நாள் உரையின் ஒலிபரப்புடன் நிகழ்வுகள் ஆரம்பமானது. தொடர்ந்து மாலை 07.05க்கு பொதுச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டது.

அதனைச்தொடர்ந்து, அவுஸ்திரேலிய பூர்வீக மக்களின் கொடியை திரு பிறேமச் செல்வம் அவர்கள் ஏற்றிவைக்க, அவுஸ்திரேலிய தேசியக்கொடியை திருமதி கிறிஸ்டின் ஓபூயிஸ் ஏற்றிவைத்தார். தொடர்ந்து தமிழீழத் தேசியக் கொடியை மாவீரர் ஒருவரின் தாயார் ஏற்றிவைத்தார்.

பின்னர் மாவீரர் ஈகைச் சுடர் ஏற்றிவைக்கப்பட, துயிலும் இல்ல பாடல் ஒலிபரப்பப்பட்டது. அதே நேரம் மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மெழுகுதிரி ஏந்தி மாவீரர்களுக்கு அகவணக்கம் செலுத்தினர். தொடர்ந்து மாவீரர்களுக்கான மலர்வணக்கம் இடம்பெற்றது.

மாவீரர் நாளுக்கான மேடை நிகழ்ச்சிகளை செல்வி கருணாகரன் டிலானி தொகுத்து வழங்கினார். தமிழீழம் எங்களின் நாடுஇ தமிழீழம் அடைந்தே தீருவோம்இ தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற கோசங்களுடன் தமிழர் கலை வளர்ச்சிக் குழுவின் பறை இசையுடன் மேடை நிகழ்வுகள் ஆரம்பமானது.

செல்வி யெகநாதன் தனுஸ்கா அவர்களின் மாவீரர் நினைவு கவிதையை தொடர்ந்து செல்வி ரகுநாதன் யதுர்சிகா அவர்களின் மாவீரர் நாள் சிறப்பு நடனம் இடம் பெற்றது.

1982ம் ஆண்டு லெப் சங்கர் அவர்களின் தியாகத்துடன் ஆரம்பமான தியாக பயணம் லெப் சீலன், உயிராயுதமான கப்டன் மில்லர், தியாகதீபம் லெப் கேணல் திலீபன், கப்டன் அங்கயற்கண்ணி என 50000க்கும் மேற்பட்ட மாவீரர்களை உரமாக்கிய மாவீரர்களை மனதில் கொண்டு அவர்கள் விட்டுச் சென்ற பணியை தொடர்வோம் என மாவீரர் நாள் சிறப்புரையை திருமதி தனலெட்சுமி ரவிச்சந்திரன் அவர்கள் வழங்கினார்.

ஜெயகஜன் ஜஸ்வின் அவர்களின் கவிதை மற்றும் செல்வி சந்திரசேகரன் அகழ்நாச்சியார், செல்வி ஜெயகஜன் தனஞ்ஜெயனி இணைந்து வழங்கிய மாவீரர் நாள் சிறப்பு நடனமும் இடம் பெற்றது.

திருமதி தனலெட்சுமி ரவிச்சந்திரன் அவர்களின் மாவீர் தின சிறப்பு கவிதையை தொடர்ந்து தமிழ் மொழிக்காவும் தமிழீழத்திற்காகவும் தமிழ் இனத்திற்காகவும் தங்களை அர்ப்பணித்த மாவீரர்களுக்கு செய்யும் நன்றிக் கடனாக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தமிழ்வழிக் கல்வியை ஊக்கப்படுத்த வேண்டும் என்ற மாவீரர்களின் நினைவுரையுடன் மேடைநிகழ்ச்சிகள் நிறைவடைந்தன.

மாலை 9.00மணிக்கு கொடி இறக்கத்துடன் 2020 ஆண்டு மாவீரர் நாள் நிகழ்வுகள் நிறைவடைந்தன.