முக்கியமான வாய்ப்பை தவறவிட்ட இந்தியா

  • உலகின் மிகப்பெரிய வாணிப கூட்டு அமைப்புக்களில் ஒன்றை உருவாக்கியிருக்கும் ‘விரிவான பிராந்திய பொருளாதார கூட்டுப்பங்காண்மை’ உடன்படிக்கை

சீனா தலைமையில் ஜப்பான், தென்கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென்கிழக்காசிய நாடுகள் சங்கத்தைச் சேர்ந்த 10 நாடுகளும் சேர்ந்து 15 நாடுகளைக் கொண்ட ‘விரிவான பிராந்திய பொருளாதார கூட்டுப்பங்காண்மை (Regional Comprehensive Economic Partnership –RCEP trade deal) உடன்படிக்கையொன்று நவம்பர் 15 கைச்சாத்திடப்பட்டது. இதன் மூலமாக உலகின் மிகப்பெரிய வாணிப கூட்டு அமைப்புக்களில் ஒன்று தோற்றம் பெற்றிருக்கிறது.

இதில் இந்தியா பங்கேற்காதமை பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது. 7 வருட காலமாக நீடித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட இந்தியா இந்த வாணிப கூட்டு அமைப்பில் இருந்து வெளியேறுவதற்கு கடந்த நவம்பரில் தீர்மானித்தது. இந்த கூட்டு அமைப்பின் 15 உறுப்பு நாடுகளில் பெரும்பாலானவற்றுடன் அதிகரிக்கும் வாணிப பற்றாக்குறையில் இருந்து தனது பொருளாதாரத்தை பாதுகாப்பதற்காகவே அந்த முடிவை எடுத்ததாக இந்தியா நியாயத்தையும் கற்பித்தது. பொருளாதாரத்தை பாதுகாப்பதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் இணக்கம் ஏற்படாத பட்சத்தில் கூட்டு அமைப்பில் இருந்து விலகுவதற்கான உரிமை தரப்படவேண்டும் என்ற தனது வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்படாதமையையும் இன்னொரு காரணமாக இந்தியா கூறியது.

இந்த காரணங்கள் எல்லாம் அந்த நேரத்தில் புறத்தோற்றத்தில் நியாயமானவையாகவே தெரிந்தன. கைத்தொழில், வாணிப மற்றும் விவசாயக் குழுக்களும் அதை வரவேற்றன.ஆனால், 12 மாதங்கள் கடந்த நிலையில், இந்தியா இந்த கூட்டு அமைப்பில் இருந்து வெளியேறுவதற்கு எடுத்த தீர்மானம் அதன் பொருளாதார காரண விளக்கங்களின் அடிப்படையில் பெருமளவில் விவாதிக்கப்பட வேண்டியதாக இருக்கிறது.

கொவிட் — 19 தொற்று நோயின் விளைவான நெருக்கடியில் உலகளாவிய வாணிபமும் பொருளாதாரமும் அமிழ்ந்துகொண்டிருக்கும் நிலையில், அதுவும் குறிப்பாக ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் புதிய தொற்று அலை தீவிரமடைவதால் அங்கு புதிய கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்படக்கூடிய நிலை தோன்றியிருக்கும் நிலையில் சீனா, தென்கொரியா, வியட்நாம், அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து உட்பட கிழக்காசிய மற்றும் பசுபிக் நாடுகளின் முதன்மை தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதிலும் பொருளாதார செயற்பாடுகளுக்கு புத்தூக்கம் கொடுப்பதிலும் ஒரு அரணாக விளங்குகிறது என்பது எந்த வகையிலும் குறைத்து மதிப்பிடக்கூடியதல்ல.

மேலும் பிரிட்டனுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான பிரெக்சிட் பேச்சுவார்த்தைகளில் தோன்றிய முட்டுக்கட்டையின் விளைவாக தீர்வைகளில் தீவிரமான நிச்சயமற்ற நிலை காணப்படுகிறது.அதனால், 15 நாடுகள் கடந்தவாரம் கைச்சாத்திட்ட பொருளாதார கூடடுப்பங்காண்மை உடன்டிக்கையில் இருந்து இந்தியா விலகிநின்றமை அத ஒரு முக்கியமான வாய்ப்பை இழந்ததாகவே அர்த்தப்படும்.

விரிவான பிராந்திய பொருளாதார கூட்டுப்பங்காண்மையின் உறுப்புநாடுகளின் நிகர உள்நாட்டு உற்பத்தி உலகளாவிய நிகர உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 30 சதவீதமாக இருப்பதையும் உலக சனத்தொகையின் மூன்றில் ஒரு பங்கினர் இந்த நாடுகளில் வாழ்வதையும் அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில், உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்ட நேரம் அவற்றின் பொருளாதார மீட்சிக்கும் சகல தரப்பினரையும் உள்ளடக்கியதான அபிவிருத்தி மற்றும் தொழில்வாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றுக்கு ஆதரவாக விளங்கக்கூடிய ஒரு இணையற்ற வாய்ப்பு என்பதில் இந்த நாடுகள் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்கின்றன; பிராந்திய விநியோக சங்கிலித் தொடரை வலுப்படுத்துவதற்கும் இது உதவும் என்று உறுப்புநாடுகள் நம்புகின்றன.

உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட தென்கிழக்காசிய நாடுகள் சங்கத்தின் (ஏசியான்) உறுப்புநாடுகளில் வியட்நாம், பிலிப்பைன்ஸ் உட்பட பல சிறிய நாடுகள் ஒப்பீட்டளவில் சிறிய பொருளாதாரங்களைக் கொண்டவை. அத்துடன் அவற்றுக்கு பெய்ஜிங்குடன் தகராறுகள் இருப்பது மாத்திரமல்ல, ஆசியாவின் மிகப்பெரிய பொருளாதாரத்துடன் கணிசமான வாணிப பற்றாக்குறையினாலும் அவை பாதிக்கப்பட்டிருக்கின்ன.

இந்த நாடுகளும் கூட்டு அமைப்பில் உள்ள மற்றைய பெரிய நாடுகளும் பொருளாதார நலன்களுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டிய அவசியத்தை உணர்ந்து சீனாவுடனான புவிசார் அரசியல் வேறுபாடுகளை பெரிதுபடுத்தாமல் விடுவதற்கு தீர்மானித்தன.நீண்டகால அடிப்படையில் தங்களது பொருளாதாரங்களுக்கு பயன்தரக்கூடிய பரஸ்பர நலனுக்குரிய வாணிப உடன்படிக்கையாக இதை கூட்டாக நோக்குவது பொருளாதார யதார்த்தநிலை தேசியவாத அரசியலை மேவி நிற்கிறது என்பதற்கு தெளிவான சான்று ஆதாரமாகும்.

இறுதி உடன்படிக்கையின் வாசகத்தின் சுருக்கம் இந்தியா கிளப்பிய (விதிகளின் மூலமுதல், சேவைகளில் வாணிபம், ஆட்களின் நடமாட்டம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பரிகாரங்களும் பற்றிய) பிரச்சினைகளை உடன்படிக்கை கவனத்தில் எடுத்திருக்கிறது என்பதைக் காட்டுகிறது.

ஒரு சந்தை என்ற வகையில் இந்தியாவின் பொருளாதார கனதியையும் பெறுமதியையும் அங்கீகரித்திருக்கும் மேற்படி கூட்டு அமைப்பின் உறுப்பு நாடுகள் புதுடில்லி அதன் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யுமானால் கதவை திறந்துவைத்திருப்பதற்கு மாத்திரமல்ல, இணைந்துகொள்ளவிரும்புகின்ற நாடுகள் கருத்து வேறுபாடுகளை தீர்த்துக்கொள்வதற்கு விதிக்கப்பட்ட 18 மாத அவகாசத்தையும் ரத்துச்செய்யத் தயாராயிருக்கின்றன. புதுடில்லி அதன் நிலைப்பாட்டை உணர்ச்சிகளுக்கு அப்பால் நின்று மீளாய்வு செய்து வர்த்தகத் தற்காப்பை விடவும் திறந்த போக்கை தழுவுவது இந்தியாவின் நலன்களுக்கு உகந்தது.

த இந்து