பேரறிவாளனின் பரோலை மேலும் நீட்டித்தது உச்ச நீதிமன்றம்

பேரறிவாளனின் பரோலை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், தன்னை விரைந்து விடுதலை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் ஏன் இவ்வளவு காலதாமதப்படுத்துகிறார் எனவும் அவருக்கு தமிழக அரசு ஆலோசனை வழங்க வேண்டாமா? எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இந்த விவகாரத்தில் ஆளுநர் மேலும் காலதாமதப்படுத்தாமல் ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்று கூறிய நீதிபதிகள் வழக்கை நவம்பர் 23-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். அதன்படி இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இறுதிக்கட்ட வாதத்தை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
அத்துடன், பேரறிவாளனின் பரோல் காலம் முடிவடைய உள்ளதால், பரோலை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். பேரறிவாளன் சிகிச்சைக்கு செல்லும்போது போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்டனர்.
பேரறிவாளனுக்கு வழக்கப்பட்ட பரோலை நவம்பர் 9ம் தேதியில் இருந்து நவம்பர் 23ம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் இதற்கு முன்பு உத்தரவு பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.