அவுஸ்திரேலியாவின் விசேட படைப்பிரிவினர் ஆப்கானில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டனர்!

அவுஸ்திரேலியாவின் விசேட படைப்பிரிவினர் ஆப்கானிஸ்தானில் 39 பொதுமக்களை கொலை செய்தனர் என்ற அதிர்ச்சி தகவல் விசாரணை மூலம் வெளியாகியுள்ளது.

அவுஸ்திரேலிய விசேட படைப்பிரிவினர் இழைத்த போர்க்குற்றங்கள் குறித்து இடம்பெற்ற விசாரணைகளின் முடிவை அவுஸ்திரேலிய பாதுகாப்பு படை வெளியிட்டுள்ளது.


57 சம்பவங்கள் தொடர்பில் 300க்கும் அதிகமானவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் முடிவில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

25 படையினர் குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர் அல்லது குற்றங்களிற்கு உதவியுள்ளனர் என விசாரணை அறிக்கை தெரிவித்துள்ளது.

2009 முதல் 2013 முதல் சிறைக்கைதிகள் விவசாயிகள் பொதுமக்களை கொலை செய்தமைக்காக 19 முன்னாள் தற்போதைய படைவீரர்களை விசாரணை செய்யவேண்டும் என விசாரணை அறிக்கை பரிந்துரை செய்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் விசேட வான்சேவை படையணியை சேர்ந்தவர்களே இந்த போர்க்குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர்.


இந்த விசாரணைகளின் போது ஒரு போர் வீரக்கலாச்சாரத்தின் வெட்கக்கேடான பதிவுகள் வெளியாகியுள்ளன என அவுஸ்திரேலிய பாதுகாப்பு படையின் (ஏடிஎவ்)தலைவர் அங்கஸ் கம்பெல் தெரிவித்துள்ளார்.

இந்த கொலைகள் எவற்றையும் மோதலின் உச்சகட்டத்தின் போது நிகழ்ந்தவைகள் என தெரிவிக்க முடியாதவை என அவர் தெரிவித்துள்ளார்.


குற்றவாளியின் நோக்கம் தவறானதாகவோ தெளிவற்றதாகவோ அல்லது குழப்பமானதாகவோயிருந்த தருணத்தில் இந்த குற்றங்கள் நிகழவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் விசாரணைகளை மேற்கொண்ட ஒவ்வொருவரும் யுத்தசட்டங்கள் எவ்வாறு போரிடவேண்டும் என்பதை நன்கு அறிந்தவர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

சில விசேட படைப்பிரிவினர் சட்டத்தினை தங்கள் கைகளில் எடுத்தனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.