அவுஸ்திரேலியாவில் 49,000 ஆண்டுகளுக்கு முன்பாகவே ஆதிமனிதன்

அவுஸ்திரேலியாவில் 49,000 ஆண்டுகளுக்கு முன்பாகவே ஆதிமனிதன் வாழ்ந்ததற்கான ஆதாரங்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவின் அடிலெய்டு மாகாணத்தில் இருந்து சுமார் 550 கிலோ மீற்றர் தூரத்தில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட வாரட்டை குகைதளத்தை மெல்பேர்னின் லா ட்ரோப் பல்கலைக்கழக தொல்லியல் அறிஞர் கில்ஸ் ஹாம் அவர்கள் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அங்கு மிகப்பழைமையான எலும்புகள் மற்றும் குவார்ட்ஸ் கற்களால் செய்யப்பட்ட கல்லாயுதங்கள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மேலும், எரிக்கப்பட்ட முட்டை ஓடுகள், எலும்புகளால் செய்யப்பட்ட ஆயுதங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களையும் தொல்லியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.

இவை இப்பகுதியிலேயே உருவான தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கில் ஹாம் கூறுகையில், ஆப்ரிக்காவில் இருந்து வெளியேறிய ஆதிமனிதனின் மூதாதையர்கள், கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியில் இருந்து அவுஸ்திரேலியா உள்ளிட்ட உலகின் பிற பகுதிகளுக்கு பரவியபோது அங்கிருந்தே பல்வேறு தொழில்நுட்பங்களை கொண்டுச்சென்று பயன்படுத்தியதாக இதுவரை கருதப்பட்டு வந்தது.

ஆனால், தற்போதைய கண்டுபிடிப்பானது உள்ளூரிலே தொழில்நுட்பத்தை அவுஸ்திரேலியாவிற்கு வந்த ஆதி மனிதர்கள் வளர்த்து எடுத்தது கண்டறியப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

இப்புதிய கண்டுபிடிப்பானது, அவுஸ்திரேலியாவில் ஆதி மனிதன் குடிபுகுந்த வரலாற்றை மாற்றி எழுதுவதற்கான அவசியத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், ஏற்கனவே கூறப்பட்டதை விட 10,000 ஆண்டுகள் முன்பாகவே ஆதிமனிதன் அவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்ததை குகையொன்றில் நடத்தப்பட்ட அகழ்வாய்வு வெளிக்கொண்டுவந்துள்ளது என்றும் கூறப்படுகிறது.