பாலியல் சித்ரவதைக்கு உள்ளாகும் சிறுமிகளுக்கு ரூ.2.22 கோடி இழப்பீடு

அவுஸ்ரேலியா நாட்டில் பாலியல் சித்ரவதைக்கு உள்ளாகும் சிறுமிகள் ஒவ்வொருவருக்கும் ரூ.2.22 கோடி இழப்பீடு வழங்கும் புதிய சட்டம் நடைமுறைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவுஸ்ரேலியா சமூகப்பணி துறை அமைச்சரான கிறிஸ்ட்டியன் போர்டர் நேற்று(4) பெர்த் நகரில் செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.

அப்போது, பாலியல் சித்ரவதைக்கு உள்ளாகும் சிறுமிகளுக்கு உளவியல் ரீதியான ஆலோசனைகள் வழங்குவது மட்டுமல்லாமல் 1,50,000 டொலர்(2,22,03,000 இலங்கை ரூபாய்) இழப்பீடு வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

இப்புதிய திட்டம் குறித்து பல மாதங்களாக பிரதமர் ஆலோசித்து வந்ததாகவும், தற்போது இத்திட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு மாகாணத்தில் உள்ள தொண்டு நிறுவனங்கள், தேவாலயங்கள், சமூக நலக்கூடங்கள் உள்ளிட்ட அமைப்புகள் மூலம் இந்த இழப்பீடு பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும்.

எதிர்வரும் 2018ம் ஆண்டு தொடக்கத்தில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு அடுத்த 10 ஆண்டுகள் அமுலில் இருக்கும் என்றும், அவசியம் ஏற்பட்டால் இக்காலத்தை நீடிக்கவும் அரசு முயற்சி மேற்கொள்ளும் என கிறிஸ்ட்டியன் போர்டர் தெரிவித்துள்ளார்.