சிறை அறை மற்றும் குளியல் அறையில் கூட அதிகாரிகள் கேமிரா வைத்தனர் என மரியம் நவாஸ் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியின் துணை தலைவராக இருந்து வருகிறார்.
கடந்த 2008ம் ஆண்டு சவுத்ரி சர்க்கரை ஆலையை பயன்படுத்தி பணமோசடியில் ஈடுபட்டனர் என மரியம் குடும்பம் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டது. ரூ.70 லட்சம் மதிப்பிலான பங்குகளும் மரியம் பேரில் பரிமாற்றம் செய்யப்பட்டன என புகார் எழுந்தது.
இந்த வழக்கிற்காக கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு மரியம் நவாஸ் சிறையில் அடைக்கப்பட்டார். சமீபத்தில் மரியம் அளித்துள்ள பேட்டி ஒன்றில், தனது சிறை அறை மற்றும் குளியல் அறையில் கூட அதிகாரிகள் கேமிரா வைத்தனர் என பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்பொழுது, 2 முறை சிறை சென்ற நான், ஒரு பெண்ணாக, சிறையில் எப்படி நடத்தப்பட்டேன் என்பது பற்றி பேசினால், அவர்கள் தங்களது முகங்களை வெளியே காட்ட முடியாது என கூறியுள்ளார்.
ஒரு பெண்ணாக பாகிஸ்தானிலோ அல்லது வேறு எங்கும் இருந்தாலும் நான் பலம் குறைந்தவள் அல்ல என அவர் கூறியுள்ளார். அவர் கில்ஜித்-பலுதிஸ்தானில் வருகிற ஞாயிறன்று நடைபெற உள்ள தேர்தலை முன்னிட்டு 7 நாள் தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட்டுள்ளார்.
இதற்காக நடந்த பொது கூட்டமொன்றில் பொதுமக்களிடையே அவர் பேசும்பொழுது, கொரோனா வைரஸ் என்ற தொற்று சமீபத்தில் உலகிற்கு வந்துள்ளது. ஆனால் கடந்த 2018ம் ஆண்டிலேயே பாகிஸ்தானில் அது பரவி விட்டது.
இந்த தொற்றுநோய் முக கவசங்களை அணிந்து கொண்டால் போய் விடாது. அதனை நீங்கள் தூக்கி எறிய வேண்டும் என கூறினார். இம்ரான் போன்ற நபர்களின் பெயர்களை பற்றி பேசுவதே வலி ஏற்படுத்துகிறது என கூறிய மரியம் நவாஸ், கான் மற்றும் அவரது கட்சி பாகிஸ்தானில் இன்றைய தினம் நோயை பரப்பி கொண்டிருக்கிறது. பிரதமர் அலுவலகத்தில் இருக்க கான் தகுதியற்றவர் என கூறி சர்ச்சை ஏற்படுத்தினார்.
இந்நிலையில், ஆளும் கான் தலைமையிலான அரசை விமர்சித்துள்ள மரியம், தனது தந்தை நவாஸ் ஷெரீப் முன்னிலையில், அறையை உடைத்து கொண்டு உள்ளே வந்து அதிகாரிகள் கைது செய்கிறார்கள் என்றால் பாகிஸ்தானில் எந்த பெண்ணுக்கும் பாதுகாப்பு இல்லை என்றும் கூறினார்.
Eelamurasu Australia Online News Portal