இம்முறை தீபாவளியை வீடுகளில் இருந்தவாறு கொண்டாடுமாறு பல்வேறு தரப்பினரும் கூறிவரும் நிலையில் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முன்னாள் நீதியரசருமான க.வி.விக்கினேஸ்வரனும் அறிக்கை மூலம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் நேற்று ‘அன்பான உறவுகளிடம் ஒரு வேண்டுகோள்’ என்ற தலைப்பில் விடுத்த அறிக்கையில் கூறியவை வருமாறு:
‘இம்முறை தீபாவளியை உங்கள் உங்கள் வீடுகளில் இருந்தவாறு கொண்டாடுங்கள். மக்கள் பெருவாரியாகக் கூடுவதை நாங்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டும். வயது முதிர்ந்தவர்கள், சலரோகம், உயர் குருதி அழுத்தம் போன்ற நோய்களுடன் வாழ்பவர்கள், மற்றும் கர்ப்பவதிகளுக்கு கொரோனா நோயானது பாரிய ஆபத்தினை விளைவித்து வருகின்றது.
ஒவ்வொருவரது வீடுகளிலும் வாழும் மேற்படி ஆபத்துக்கு உள்ளாகக் கூடிய உறவினர்கள், நண்பர்களது உயிர்களைப் பாதுகாக்க வேண்டுமானால் அவர்களுக்கு கொரொனா தொற்றாது பாதுகாத்துக் கொள்ள வேண்டும். எனவே வரவுள்ள தீபாவளி தினத்தில் சுற்றத்தார், உறவுகள், நண்பர்கள் ஆகியோரின் வீடுகளுக்குச் செல்லுதல், புதிய உடுபுடவைகள் வாங்குதல், ஆபரணங்கள் வாங்குதல் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்குக் கூட்டமாகச் செல்லுதல் ஆகிய வழக்கங்களைத் தவிர்த்தல் நலம் என்று நாம் கருதுகின்றோம்.
ஏனெனில் அவ்வாறு கருமங்களுக்குச் செல்லும் போது கொரோனா தொற்றிற்கு ஆளாக நேரிடலாம். கொரோனா தொற்று எம்மிடையே பரவத் தொடங்கிவிட்டால் பாரிய அசௌகரியங்களுக்கு நாம் யாவரும் முகம் கொடுக்க வேண்டி வரும்.
இம்முறை தீபாவளியை வீடுகளில் இருந்தவாறு கொண்டாடுவதன் மூலம் ஒவ்வொருவரும் தங்களினதும் தங்களது இரத்த உறவுகள் மற்றும் நண்பர்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
அபாயகரமான சூழலில் கொண்டாட்டங்களை மட்டுப்படுத்துவதில் தவறு ஏதும் இல்லை என்பதே எமது கருத்து. வெறும் ஓர் அரசியல்வாதிக்கு ஏன் இந்தக் கரிசனை என்று எம்முள் சிலருக்கு ஆத்திரம் கூட வரலாம். ஆனால் சமூக நலனில் ஈடுபாடுள்ளவனே அரசியல்வாதி. வரமுன் காக்கும் நோக்குடன் இந்த அரசியல்வாதி செயற்படுகின்றார். அவ்வளவு தான்’ என அதில் தெரிவித்துள்ளார்.
Eelamurasu Australia Online News Portal