இயற்கையை அழித்து எங்களையே அடித்துக்கொள்ளும் இனமானோம் நாம்!

முல்லைத்தீவு ஊடகவியலாளர்கள் இருவர் தாக்கப்பட்டமையை வன்மையாக கண்டிப்பாதாக வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

முல்லைத்தீவு முறிப்பு பகுதியில் சட்டவிரோதமான முறையில் தேக்கு மரங்கள் வெட்டப்பட்டு கடத்தப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது.

இது தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மற்றும் ஊடகவியலாளர் குமணன் ஆகியோர் மீதே இந்த தாக்குதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மரக்கடத்தில் ஈடுபட்ட முறிப்பு பகுதியைச் சேர்ந்தவர்களே இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர் எனவும் தாக்குதல் நடத்திய நபர்களுக்கு எதிராக காவல் துறை  நிலையத்தில் 20ற்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

மேலும் வன வள திணைக்களம் மற்றும் காவல் துறையின் ஆதரவுடனேயே இந்த மரக்கடத்தல் இடம்பெறுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இயற்கையை அழித்து எங்களையே அடித்துக்கொள்ளும் இனமானோம் நாம்!!

இந்த தாக்குதலை நடத்தியது யார் இவர்கள் பின்னணி என்ன என்பதினை காவல் துறையின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துவதுடன் தாக்குதலுக்கு உள்ளான ஊடகவியலாளர்கள் நலன் பெற வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்.

இதுபோன்ற சம்பவங்கள் இனிவரும் காலங்களில் எமது தேசத்தில் நடைபெறக்கூடாது என்பதே எமது தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் நோக்கமாகும்.என்றார்