வடகொரியாவில் யாருக்கும் கொரோனா தொற்று பரவவில்லை என அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் அறிவித்துள்ளார்.
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது. இந்த கொடிய வைரஸ் இதுவரை 3 கோடிக்கும்
அதிகமானோருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தாக்குதலுக்கு 10 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியாமல் வல்லரசு நாடுகளும் தடுமாறி வரும் நிலையில், தங்கள் நாட்டில் யாருக்கும் கொரோனா தொற்று பரவவில்லை என வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அறிவித்து உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார்.
வடகொரியாவின் ஆளும் கட்சியின் 75-வது ஆண்டு விழா இன்று நடைபெற்றது. இதை கொண்டாடும் வகையில் அந்நாட்டின் தலைநகரில் ராணுவ அணுவகுப்பு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அந்நாட்டு அதிபர் கிம் ஜங் உன், வடகொரியாவை சேர்ந்த யாருக்கும் கொரோனா தொற்று பரவவில்லை. வைரஸ் பரவலை தடுக்க உதவிய ராணுவத்திற்கு அவர் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
வடகொரியாவில் யாருக்கும் கொரோனா பரவவில்லை என கிம் தெரிவித்து வரும் நிலையில் இந்த தகவலின் உண்மைத்தன்மை மிகுந்த கேள்விக்குறியானது என தென்கொரியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவுடன் எல்லையை பகிரும் வடகொரியா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஹூபேய் மாகாணத்தில் கொரோனா பரவத்தொடங்கியதையடுத்து இந்த ஆண்டு ஜனவரி மாதமே தனது நாட்டின் எல்லைகள் அனைத்தையும் மூடியது என்பது குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal