வெளிநாட்டில் சிக்குண்டுள்ள இலங்கையர்களை அழைத்து வருவதில் தனியார் துறையின் தலையீடு காரணமாக பல மோசடிகள்!

வெளிநாடுகளில் சிக்குண்டுள்ள இலங்கையர்களை அழைத்து வரும் நடவடிக்கைகளில் தனியார் துறையின் தலையீட்டை நிறுத்துவதற்கு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தீர்மானித்துள்ளார்.

 

தனியார் துறையினரின் ஈடுபாட்டுடன் முன்னெடுக்கப்பட்ட வெளிநாட்டில் சிக்குண்டுள்ள இலங்கையர்களை அழைத்துவரும் நடவடிக்கைகளின் போது பொதுவான பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படவில்லை எனவும் நிதிமோசடி இடம்பெற்றுள்ளதாகவும்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளதை தொடர்ந்தே ஜனாதிபதி இந்த முடிவை எடுத்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

 


வெளிநாட்டில் சிக்குண்டுள்ள இலங்கையர்களை சுகாதார விதிமுறைகளை பின்பற்றியே அழைத்துவரவேண்டும் என்றபோதிலும் தனிமைப்படுத்தல் விதிமுறைகள் அலட்சியம் செய்யப்பட்டுள்ளன என புலனாய்வு துறையினர் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

வெளிநாட்டில் சிக்குண்டுள்ள இலங்கையர்களை அழைத்து வரும் போதும் குறிப்பிட்ட எண்ணிக்கையானவர்களையே அழைத்து வரவேண்டும் என்ற விதிமுறை காணப்படுகின்ற போதிலும் அந்த விதிமுறை பின்பற்றப்படவில்லை என புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன.


இலங்கையர்களை அழைத்துவரும் போது குறிப்பிட்ட விமானசேவை ஒரு பயணியிடமிருந்து இரண்டு ஆசனங்களுக்கான கட்டணத்தை அறவிட்டபோதிலும் தனியார் நிறுவனங்கள் அதற்கு மாறாக செயற்பட்டுள்ளன என புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

விமானபயணசீட்டினை முன்பதிவு செய்யும் நடவடிக்கைகள் தனியார் நிறுவனங்களுடன் தொடர்புபட்ட முகவர்கள் ஊடாகவே இடம்பெற்றுள்ளன.

இது ஜுலை மாதம் முதல் இடம்பெறுகின்றது இலங்கைக்கு திரும்புபவர்களின் விபரங்களை பெறுவதற்காக குறிப்பிட்ட நபர்கள் சில வெளிநாட்டு தூதுவர்களையும் பயன்படுத்தியுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.