அனுஷ்கா பந்தா இல்லாத நடிகை – மாதவன் புகழாரம்

நடிகை அனுஷ்கா பெரிய நடிகை ஆனாலும், பந்தா இல்லாமல் இருப்பதாக நடிகர் மாதவன் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

மாதவன், அனுஷ்கா நடிப்பில் உருவாகி இருக்கும் சைலன்ஸ் திரைப்படம் நாளை ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளது. இதையொட்டி நடிகர் மாதவன், பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது: “அனுஷ்காவும், நானும் முதன்முதலாக ‘இரண்டு’ படத்தில் ஜோடியாக நடித்தோம். அந்த படத்தில் அவ்வளவு அழகாக இருப்பார். அப்போது அவர் சினிமாவுக்கு புதுசு. 14 வருடங்கள் கழித்து நாங்கள் இருவரும் ‘சைலன்ஸ்’ படத்தில் இணைந்து நடித்து இருக்கிறோம். அனுஷ்காவிடம் அதே அழகு.
அவருடைய தோற்றத்தில் எந்த மாற்றமும் இல்லை. பதினான்கு வருடங்களில் அவர் அற்புதமான நடிகையாகி விட்டார். சினிமா மீது அவருக்கு இருக்கும் அக்கறை, அனுபவம், கதை சரியாக நகர்கிறதா? என்று கேட்டு தெரிந்து கொள்வதை எல்லாம் பார்த்தபோது ரொம்பவே பெருமைப்பட்டேன். ‘பாகுபலி’க்கு பிறகு பெரிய நடிகையாகி விட்டார். என்றாலும் அவரிடம் பந்தா இல்லை.
அனுஷ்கா
சினிமா வேறு ஒரு வடிவத்துக்கு மாறியிருக்கிறது. ஓடிடி தளங்கள் புதிய மாற்றமாக வரப்போகிறது என்பது 10 வருடங்களுக்கு முன்பே தெரியும். அதை சுதா கொங்கராவிடம் சொன்னபோது, முதலில் அவர் நம்பவில்லை. இப்போது, “எப்படிடா சொன்னே?” என்று கேட்கிறாள்.
ஓடிடி-யில் நிறைய பேர் பணிபுரிய தொடங்கி விட்டார்கள். மணிரத்னமே ஓடிடிக்கு வந்து விட்டார். எதிர்காலம் எப்படியிருக்கும்? என்ற கேள்வியும், பயமும் எல்லோருக்கும் இருக்கிறது. அனைத்தையும் துணிச்சலுடன் கையாள வேண்டும்.” இவ்வாறு மாதவன் கூறினார்.