யாழ்ப்பாணம், நீர்வேலி சந்திக்கு அண்மையாக உள்ள வீடுகளுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் தனுரொக்கின் நண்பன் மீது சராமாரியாக வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தியுள்ளது. மகனைக் காப்பாற்ற முற்பட்ட தாயார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இருவரும் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று கோப்பாய் காவல் துறையினர் தெரிவித்தனர்.
இந்த வன்முறைச் சம்பவம் நேற்று இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் பு.சிவா (வயது -30) அவரது தாயார் ரேணுகா (வயது -50) ஆகிய இருவர் மீதே வீடு புகுந்து இந்தத் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் அடங்கிய கும்பலே இந்தத் தாக்குதலை முன்னெடுத்துள்ளது என்று கோப்பாய் காவல் துறையினர் தெரிவித்தனர்.
வன்முறைக் கும்பல் வாள்கள், கம்பிகள் கொண்டே தாக்குதலை நடத்தியுள்ளது. வீட்டிலிருந்த பெறுமதியான பொருள்களை அடித்துச் சேதப்படுத்தியும் தீயிட்டு எரித்தும் அட்டூழியத்தில் ஈடுபட்டுவிட்டு வன்முறைக் கும்பல் தப்பித்துள்ளது
கோப்பாய் காவல் துறையினர் , மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Eelamurasu Australia Online News Portal