ஆஸ்திரேலிய முகாம்களில் அலைப்பேசிகளை தடைச்செய்யும் மசோதா

ஆஸ்திரேலிய குடிவரவுத் தடுப்பு முகாம்கள் அலைப்பேசி பயன்பாட்டை தடைச்செய்வது தொடர்பாக ஆஸ்திரேலிய அரசால் முன்மொழியப்பட்ட புலம்பெயர்வு திருத்த மசோதா மீதான வாக்கெடுப்பு ஆஸ்திரேலிய மேலவையில் நடக்கவிருக்கிறது. இந்த நிலையில், இம்மசோதா முன்மொழியும் அலைப்பேசி தடை கனடா மற்றும் இன்னும் பிற நாடுகளில் மீள்குடியேற முயற்சிக்கும் அகதிகளுக்கு மேலும் சிக்கல்களை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இது அகதிகள் மேலும் கூடுதலான காலம் தடுத்து வைக்கப்படுவதற்கு வழிவகுக்கும் என்றும் இதனால் ஆஸ்திரேலிய வரிப்பணம் பல மில்லியன்கள் செலவாகக்கூடும் என Ads-Up Refugee Network அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைய முயன்ற நூற்றுக்கணக்கான அகதிகள் சுமார் 8 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய தடுப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு இருந்த 822 அகதிகளுக்கு ஆஸ்திரேலியா- அமெரிக்கா அகதிகள் ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்காவில் மீள்குடியேறுவதற்கான வாய்ப்பு அமைந்துள்ள போதிலும் பலர் அந்த வாய்ப்பின்றி தொடர்ந்து தடுப்பில் உள்ள நிலை நீடிக்கின்றது.

இந்த அகதிகள் ஒருபோதும் ஆஸ்திரேலியாவில் குடியமர்த்தப்பட மாட்டார்கள் என ஆஸ்திரேலிய அரசு எச்சரித்து வரும் நிலையில், வேறொரு நாட்டில் தஞ்சம் பெறுவதே இந்த அகதிகள் முன் இருக்கும் வாய்ப்பாக உள்ளது. இந்த வரிசையிலேயே அண்மைக்காலமாக ‘கனடா’வில் தஞ்சம் பெறும் முயற்சிகளை இந்த அகதிகள் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், 28 அகதிகளின் விண்ணப்பங்களுக்கு தாங்கள் உதவுவதாக Ads-Up Refugee Network அமைப்பு வரும் மாதங்களில் மேலும் பல அகதிகள் விண்ணப்பிக்ககூடும் என்கிறது.
கனடாவில் தஞ்சம் பெறும் விண்ணப்பப் பரிசீலணையில் பல விதமாக ஆவணங்களை அகதிகள் சமர்பிக்க வேண்டியிருக்கும், அதற்கு அலைப்பேசிகள் அவசியமானது என்பது இந்த அமைப்பின் வாதமாக இருக்கின்றது.

“அலைப்பேசி பயன்பாட்டை தடைச்செய்வது என்பது கொடுமையானது மட்டுமல்ல, தேவையற்றதும் கூட. இது கனடா தொடர்பான எங்களது பணியைப் பாதிக்கும். இதனால், ஆஸ்திரேலிய வரிப்பணத்தின் மில்லியன் கணக்கான டாலர்களை கூடுதலாக செலவாகக்கூடும்,” என்கிறார் இந்த அமைப்பின் இணை நிறுவனர் பென் வின்சர்.

அதே சமயம், இம்மசோதா ஆஸ்திரேலிய தடுப்பில் குற்றப்பின்னணியுடன் உள்ள சட்டவிரோத குடியேறிகளையே குறிவைக்கும், அலைப்பேசிகள் மீதான பொத்தம் பொதுவான தடையாக இருக்காது என நியாயப்படுத்துகிறார் ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் அலன் டஜ். ஆனால், இத்தடை தடுப்பில் இருக்கும் ஒட்டுமொத்த அலைப்பேசிகள் மீதான தடையாகவே இருக்கும் என்கிறது இம்மசோதாவை எதிர்க்கும் ஆஸ்திரேலிய லேபர் கட்சி மற்றும் பசுமைக்கட்சி. மனித உரிமை அமைப்பான ஆம்னெஸ்டி இண்டர்நேஷனலும் இதே கருத்தினையே முன்வைக்கிறது.

புலம்பெயர்வு திருத்த மசோதா 2020 (Migration Amendment (Prohibiting Items in Immigration Detention Facilities) Bill) எனும் இம்மசோதா ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் கீழவையில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி நிறைவேறியுள்ள நிலையில், வரும் அக்டோபர் மாதம் மேலவையில் இது தொடர்பான வாக்கெடுப்பு நடக்க உள்ளது.