பழங்குடி இனத்தவர் கதாபாத்திரத்தில் மீண்டும் ஜெயம் ரவி

விஜய் இயக்கத்தில் உருவாகும் படத்தில் மீண்டும் பழங்குடி இனத்தவர் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார் ஜெயம் ரவி.

பிரபுதேவா, தமன்னா நடிப்பில் வெளியான ‘தேவி’ படத்தைத் தொடர்ந்து தனது படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார் இயக்குநர் விஜய். ஜெயம் ரவி நாயகனாக நடிக்கும் இப்படத்தை இப்படத்தை தனது ‘தி திங்க் பிக் ஸ்டூடியோஸ்’ நிறுவனம் மூலமாக தயாரிக்கவும் இருக்கிறார்.

நாயகியாக சாயிஷா சைகல், ஒளிப்பதிவாளராக திரு, இசையமைப்பாளராக ஹாரிஸ் ஜெயராஜ், சண்டை பயிற்சியாளராக சில்வா ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

இப்படத்தின் நாயகி சாயிஷா சைகல், இந்தி திரையுலகின் பழம்பெரும் நடிகரான திலீப் குமாரின் பேத்தியாவார். தெலுங்கில் நாகார்ஜூனின் இளைய மகன் அகில் நடித்த ‘அகில்’ படத்தின் மூலமாக திரையுலகுக்கு அறிமுகமானவர்.

இப்படம் குறித்து “இப்படத்தில் ஜெயம் ரவி பழங்குடி இனத்தவராக நடித்து வருகிறார். இந்த வேடத்துக்காக கெட்டப் மற்றும் உடலமைப்பை மாற்றி இருக்கிறார்” என்று படக்குழு சார்பில் தெரிவித்தார்கள்.

இந்த கெட்டப் தான் படத்தின் மிகப்பெரிய ஹைலைட்டாக இருக்கும் என்பதால், அதனை ரகசியமாக வைத்திருக்க படக்குழு முடிவு திட்டமிட்டுள்ளது.

ஏற்கெனவே எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் வெளியான ‘பேராண்மை’ படத்தில் பழங்குடி இனத்தவராக ஜெயம் ரவி நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.