மோடியின் கருத்திற்கு சிறிலங்கா உறுதிமொழி எதனையும் வழங்கவில்லை

13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தவேண்டும் என இந்திய பிரதமர் விடுத்த வேண்டுகோளிற்கு சிறிலங்கா உறுதிமொழி எதனையும் வழங்கவில்லை.

நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுப்பதன் மூலம் சிறிலங்கா  அரசாங்கத்தை தமிழ் மக்களின் ஐக்கிய இலங்கைக்குள்ளான சமத்துவம் நீதி கௌரவம் குறித்த அபிலாசைகளுக்கு தீர்வை காணுமாறு கேட்டுக்கொண்டுள்ள இந்திய பிரதமர் 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


மக்களின் ஆணை மற்றும் அரசமைப்பு ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதன் மூலமும் நல்லிணக்கதத்தை ஏற்படுத்துவதன் மூலமும் தமிழ் மக்கள் உட்பட அனைத்து இன மக்களினதும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை இலங்கை முன்னெடுக்கும் என பிரதமர் மகிந்த ராஜபக்ச நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இருநாடுகளும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் அவர்களது நிலைப்பாடுகள் இடம்பெற்றுள்ளன.

எனினும் கொழும்பில் பிரதமர் மகிந்த ராஜபக்ச அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 13வது திருத்தம் குறித்த விடயங்கள் குறிப்பிடப்படவில்லை.மாறாக இந்திய அறிக்கை போன்று இரு நாடுகளின் தலைவர்களும் ஆராய்ந்த பரந்துபட்ட விடயங்கள் குறித்தே அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடபகுதி கடலில் இந்திய மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கை குறித்து இந்திய பிரதமரிடம் எடுத்துரைப்பேன் என பிரதமர் வெள்ளிக்கிழமை வடபகுதி மீனவர்களிடம் தெரிவித்த போதிலும் இந்த விடயம் தொடர்பில் எடுக்கப்பட்ட நிலைப்பாடு குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இருநாட்டு மீனவர்கள் தொடர்புபட்ட விடயங்களுக் வழமையான கலந்தாலோசனைகள் இருதரப்புஅதிகாரிகள் ஊடாக தீர்வு காண்பதற்கு இரு நாடுகளும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சண்டே டைம்ஸ்