முகமாலை முன்னரங்கில் மீட்கப்பட்ட மண்டை ஓடு எலும்புக்கூடு பெண் போராளியின் என அடையாளம்

பளை முகமாலையில் முன்னர் விடுதலைப் புலிகளின் முன்னரங்கு காவல் பகுதியில் அகழ்வு மேற்கொள்ள இராணுவத்தினர் நீதிமன்ற உத்தரவை பெற்று கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி த.சரவணராஜா மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் முன்னிலையில் நேற்று (23) அகழ்வு பணியின் போது இரு பெண் போராளிகளின் இலக்க தகடுகள், ஒரு தொகுதி எலும்புக்கூடுகள், மற்றும் சீருடைகள் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் ஆயுதங்கள் மற்றும் எலும்புக் கூடுகள் இருப்பதாக இராணுவத்தினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த பகுதியை தோண்டி ஆராய நீதிமன்ற அனுமதியை இராணுவத்தினர் காவல் துறையிடம் பெற்றனர்.

இதற்கமைய நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் குறித்த பகுதிக்கு சென்ற கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி த.சரவணராஜா மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் முன்னிலையில் அகழ்வு பணி இடம்பெற்றது.

இதன்போது அங்கு இரு பெண் போராளிகளின் இலக்க தகடுகள், ஒரு தொகுதி எலும்புக்கூடுகள், மற்றும் மண்டைஓடு ஒன்றும், விடுதலைப்புலிகளால் வழங்கப்படும் இலக்கத்தடு, சைனட்(குப்பி) ஒன்று, பெண் போராளிகள் இடுப்பில் அணியும் பட்டி, உரைப்பைகள் விடுதலைப்புலிகளின் வரி சீருடைகள், பச்சை கலர் சிரூடைகள் பாட்டா ஒன்று, பற்றிகள் ,சம்போ போத்தல்கள், துப்பாக்கி ஒன்று, மகசீன் 8 , கைக்குண்டு இரண்டு , மூன்று கோல்சர் கவர் என்பன மீட்கப்பட்டதன.

இதில் மீட்கப்பட்ட விடுதலைப்புலிகளின் இலக்க தகடில் த.வி.பு ஞா 0302 மற்றும் த.வி.பு. ஞ 0188 எனவும், பி பிளஸ் மற்றும் ஓ பிளஸ் ரத்த வைகையை சேர்ந்தவர்கள் எனவும் சோதியா படையணியை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த அகழ்வு பணியை தொடர்ந்து முன்னெடுக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.