ஆஸ்திரேலியாவில் உள்ள சீனர்களின் வீடுகளில் திடீர்ச் சோதனைகள் – சீனா கண்டனம்

ஆஸ்திரேலியாவில் உள்ள சீன அரசாங்க ஊடகச் செய்தியாளர்களின் வீடுகளில் திடீர்ச் சோதனைகள் நடத்தப்பட்டது நியாயமில்லாத செயல் என்று சீனா குறைகூறியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டுத் தலையீடு இருக்கிறதா என்பதை விசாரிக்கும் நோக்கில் அவர்களின் வீடுகள் சோதிக்கப்பட்டன.

ஆஸ்திரேலியாவின் பாதுகாப்புப் புலனாய்வுத் துறை அதிகாரிகள், சீன நிருபர்கள் நால்வரின் வீடுகளைக் கடந்த ஜூன் மாதம் சோதனையிட்டதாகச் சீன ஊடகங்கள் தெரிவித்தன.

விசாரணையை அடுத்து அந்த நால்வரும் ஆஸ்திரேலியாவைவிட்டு வெளியேறினர்.

மேலும், இரண்டு சீனக் கல்விமான்களின் விசாக்களும் ரத்துசெய்யப்பட்டன.

பாதிக்கப்பட்ட சீன நாட்டவர் 6 பேரும் வேவு பார்த்தல், வெளிநாட்டுத் தலையீடு ஆகியவற்றில் ஈடுபட்டதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் குறிப்பிட்டன.

சீனாவில் உள்ள ஆஸ்திரேலியச் செய்தியாளர்கள் இருவரைக் காவல்துறை அதிகாரிகள் விசாரிக்க முற்பட்டதை அடுத்து ஆஸ்திரேலிய அதிகாரிகளின் செயல் குறித்து சீனா குறைகூறியுள்ளது.