வடக்கில் அவதூறு பரப்பும் இணையத்தளம் ஒன்றுக்கு தடை

வடக்கில் நீதித்துறை தொடர்பாக பொய்யானதும், அவதூறு பரப்புவதுமான செய்தியை வெளியிட்டுவந்த தமிழ் இணையத்தளமொன்று நேற்றையதினம் சிறீலங்கா தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவினால் தடை செய்யப்பட்டுள்ளது.

ஊடகத்துறை மற்றும் நீதி அமைச்சின் முறைப்பாட்டிற்கமையவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் சுனில் சிறிலால் தெரிவித்துள்ளார்.

‘குறித்த இணையத்தளமானது, வடக்கில் நீதித்துறையின் நடவடிக்கைகள் தொடர்பாக பொய்யான தகவல்களை வெளியிட்டு வந்ததாகவும், நீதிபதிகள் மற்றும் சட்டவாளர்கள் தொடர்பாக அவதூறான செய்திகளை வெளியிட்டு வருவதாகவும், வடக்கில் பொதுமக்களைத் தூண்டி விடும் வகையில் செயற்படுவதாகவும், இந்த இணையத்தளம் மீது முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குறித்த இணையத்தளமானது, சிறீலங்கா ரெலிகொம் இணைய சேவை வழங்கியைப் பயன்படுத்தி வந்தமையும் குறிப்பிடத்தக்கது.

குறித்த முறைப்பாடுகள் தொடர்பாக, பாதுகாப்பு அமைச்சு மற்றும் ஊடக அமைச்சு மேற்கொள்ளும் விசாரணைகள் முடிவடையும்வரை இந்தத் தடை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.