அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த குற்றவாளிக்கு பரோல் இல்லாது ஆயுள் தண்டனை!

நியூசிலாந்தின் கொடூரமான துப்பாக்கிச் சூட்டில் 51 முஸ்லிம் வழிபாட்டாளர்களைக் கொலைசெய்த நபருக்கு நியூசிலாந்து நீதிமன்றம் பரோல் இல்லாமல் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இது போன்ற தண்டனை நியூஸிலாந்தில் வழங்கப்படுவது இது முதல் சந்தர்ப்பமாகும்.

29 வயதான அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ப்ரெண்டன் டாரன்ட் என்ற மேற்படி குற்றவாளி, 51 கொலை குற்றச்சாட்டுகள், 40 கொலை முயற்சிகள் மற்றும் ஒரு பயங்கரவாத செயலைச் செய்ததாக ஒரு குற்றச்சாட்டு ஆகியவற்றை ஒப்புக் கொண்டார்.

தண்டனையின் போது அவர் உயிர் பிழைத்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களையும் சந்தித்துள்ளார்.

ப்ரெண்டன் டாரன்ட், கடந்த ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் திகதி நியூஸிலாந்தின் தென் தீவு நகரமான கிறிஸ்ட்சர்ச்சில் அமைந்துள்ள இரு மசூதிகளில் வெள்ளிக்கிழமை தொழுகையில் கலந்து கொண்ட முஸ்லிம்கள் மீது மூர்க்கத்தனமாக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டார்.

அத்துடன் அவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளும் காட்சியையும் தனது பேஸ்புக் பக்கத்தில் நேரடியாக ஒளிபரப்பினார்.

இரண்டு மசூதிகளில் நடந்த இந்த துப்பாக்கி தாக்குதல்கள் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், நியூஸிலாந்தில் ஆயுத தடை சட்டமூல அமுலாக்கத்துக்கு வழிவகுத்ததுடன், ஆயிரக்கணக்கான துப்பாக்கிகளும் பல தரப்பினரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது.