விண்வெளியில் கீரை வளர்க்கும் நாசா விஞ்ஞானிகள்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இலைகோஸ் கீரை வகையை பயிர் செய்யும் முயற்சியில் நாசா விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர்.

பூமியைப் போன்று விண்வெளியிலும் உணவு வகைகளை பயிர் செய்யும் முயற்சியில் நாசா இறங்கியுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் இலைகோஸ் ரக கீரை வகை பயிர் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆய்வை நாசா விண்வெளி வீரர் ஷேன் கிம்புரோ தொடங்கி வைத்திருக்கிறார். இதுகுறித்து இந்த திட்டத்தின் மேலாளர் நிக்கோல் டம்பர் கூறுகையில் “நாங்கள் எதிர்பார்த்ததைவிட பணிகள் சிறிது மந்தமாகவே நடைபெற்றது. எனினும் அனைத்து வகை கீரைகளையும் வெற்றிகரமாக பயிர் செய்து விட்டோம்.

இந்த கீரை வளர நான்கு வாரங்கள் ஆகும். அதன்பின் இவற்றை அறுவடை செய்வோம்” என்றார். இந்த செடிகளை உரம் இட்டு, தண்ணீர் ஊற்றி ஏற்கனவே வளர வைத்திருப்பார்கள். வளரவைத்த செடிகள் என்பதால் விண்வெளியில் இந்த செடிகளுக்கு சிறிது தண்ணீர் ஊற்றி நட்டு வைத்தாலே அவை விரைவாக வளர்ந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்காலத்தில் செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கு விஞ்ஞானிகள் செல்லும்போது அங்கு ஏற்படும் உணவு பிரச்சினையை தீர்க்கவே இந்த முயற்சியில் நாசா விஞ்ஞானிகள் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.