ஒன்பதாவது நாடாளுமன்றத்திற்கான வாக்கெடுப்பு நாளை! 196 ஆசனங்களுக்காக 7452 வேட்பாளர்கள் களத்தில்

இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்றத்திற்கான வாக்கெடுப்பு நாளை புதன்கிழமை இடம்பெறவுள்ளது. ஒரு கோடியே 62 இலட்சத்து 63 ஆயிரத்து 885 பேர் இம்முறை வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். 2019 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலுக்கமையவே தேர்தல் நடைபெறவுள்ளதாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் நாடளாவிய ரீதியில் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த ;3652 வேட்பாளர்களும் சுயாதீன குழுக்களைச் சேர்ந்த ; 3800 வேட்பாளர்களும் போட்டியிடவுள்ளனர். கொழும்பு , கம்பஹா , களுத்துறை , கண்டி , மாத்தளை, நுவரெலியா , காலி , மாத்தறை , அம்பாந்தோட்டை , யாழ்ப்பாணம் , வன்னி , மட்டக்களப்பு , திகாமடுல்லை , திருகோணமலை , குருணாகல் , புத்தளம் , அநுராதபுரம் , பொலன்னறுவை , பதுளை , மொனராகலை , இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய 22 தேர்தல் மாவட்டங்களிலும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் சார்பில் ஒட்டுமொத்தமாக 7 , 452 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றர்.

நேரம் நீடிப்பு

தேர்தலில் வாக்களிப்பதற்கான நேரம் ஒரு மணித்தியாலயத்தினால் நீடிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்களிக்க முடியும். கடந்த அனைத்து தேர்தல்களிலும் காலை 7 மணி முதல் மாலை 4 வரை மாத்திரமே வாக்களிப்பதற்கான நேரம் வழங்கப்பட்டது. எனினும் தற்போது முன்னரைப் போன்றல்லாமல் கொரோனா அச்சம் காரணமாக புதியதொரு வழமையான சூழலில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.

எனவே சுகாதார அமைச்சினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஆலோசனைகளுக்கு அமைய இம்முறை வாக்கெடுப்பினை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல்கள் ஆணைக்குழு முன்னெடுத்துள்ளது. இதன் காரணமாக வழமையை போன்றல்லாமல் நபரொருவர் வாக்களிப்பதற்காக நேரம் அதிகமாகும் என்று தேர்தல் ஒத்திகைகளின் போது கணிப்பிடப்பட்டது. அதற்கமையவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

அங்கவீனமுற்ற வாக்காளர்கள்

தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த போதிலும் முழுமையாகவோ அல்லது பகுதியளவிலோ ஏதேனுமொரு உடல் ரீதியில் ஏதேனுமொரு வகையில் உடல் அங்கவீனமுற்ற வாக்களாளர்கள் உடன் அழைத்து வரக் கூடிய உதவியாளர் 18 வயதைப் பூர்த்தி செய்வராக இருக்க வேண்டும் என்பதோடு , அவரொரு வேட்பாளராக இருக்கக் கூடாது. அதே போன்று பாராளுமன்றத் தேர்தலில் அரசியல் கட்சியொன்றின் அதிகாரமளிக்கப்பட்ட முகவரொருவராகவோ அல்லது பிரதேச , சுயேட்சை குழுவொன்றின் தலைவராகவோ வாக்கெடுப்பு பிரிவின் முகவராகவோ இருக்கக் கூடாது.

இவ்வாறு உதவியாளர் ஒருவரை அழைத்துச் செய்வதற்காக பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள தகுதிச் சான்றிதழ் ஒன்றை உரிய வாக்கெடுப்பு நிலையத்தின் அலுவலர்களிடம் சமர்ப்பித்தல் வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை அனைத்து மாவட்ட அலுவலகங்கள் , கிராம அலுவலகங்களிலிருந்து பெற்றுக் கொள்ள முடியும்.

மேற்கூறப்பட்டவாறு உதவியாளர் ஒருவரை உடன் அழைத்து வர முடியாத அங்கவீனமுற்ற வாக்காளொருவருக்கு தேவையேற்படின் இதற்கு முன்னைய தேர்தல்களின் போது மற்றுமோர் அலுவலகரின் முன்னிலையில் சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலரைக் கொண்டு வாக்குச்சீட்டை அடையாளமிட்டுக் கொள்வதற்கு வாய்ப்புள்ளது.

உத்தியோகபூர்வ அடையாள அட்டைகள்

தேசிய அடையாள அட்டை, செல்லுபடியான சாரதி அனுமதிப்பத்திரம் , கடவுச் சீட்டு மற்றும் தேர்தல் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டை என்பவற்றில் ஏதேனுமொரு அடையாள அட்டையையும் கொண்டிருக்காத நபருக்கு வாக்களிப்பளிப்பிற்கு அனுமதியளிக்கப்பட மாட்டாது என்று சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேற்கூறப்பட்டவாறு செல்லுபடியாகும் அடையாள அட்டையும் எதனையும் கொண்டிராத வாக்காளர்கள் தேர்தல் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டையையேனும் வைத்திருக்க வேண்டும். ஏற்றுக் கொள்ளப்படும் அடையாள அட்டை எதுவும் இல்லாத ஆளொவருக்கு அஞ்சல் வாக்களிப்பதற்கு வாய்ப்பளிக்கப்படமாட்டாது என்றும் , அதன்படி கடமையை ஆற்றுமாறு உரிய தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஆசனங்கள்

பொதுத் தேர்தலில் மாவட்டங்களுக்கான ஆசன ஒதுக்கீடுகளை அவதானிக்கும் போது கொழும்பு 19 , கம்பஹா 18 , களுத்துறை 10 , கண்டி 12 , மாத்தளை 5 , நுரவெலியா 8 , காலி 9 , மாத்தறை 7 , அம்பாந்தோட்டை 7 , யாழ்ப்பாணம் 7 , வன்னி 6 , மட்டக்களப்பு 5 , திகாமடுல்லை 7 , திருகோணமலை 4 , குருணாகல் 15 , புத்தளம் 8 , அநுராதபுரம் 9 , பொலன்னறுவை 5 , பதுளை 9 , மொனராகலை 6 , இரத்தினபுரி 11 , கேகாலை 9 என்ற அடிப்படையில் 196 ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஏனைய 29 உறுப்பினர்கள் தேசிய பட்டியல் ஊடாக தெரிவு செய்யப்படுவர்.