சீன மாணவர்களை குறி வைத்து கடத்தும் ஆஸ்திரேலிய கும்பல்

ஆஸ்திரேலியாவில் படித்து வரும் சீன மாணவர்களை குறி வைத்து கடத்தும் கும்பல் அவர்களை மிரட்டி கோடிகணக்கில் பணம் பறித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஏராளமான சீன மாணவர்கள் படித்து வருகின்றனர். பெரும்பாலும் சீன மாணவர்கள் பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருப்பார்கள். பணக்காரக சீன மாணவர்களை அடையாளம் கண்டு கொள்ளும் ஆஸ்திரேலிய கும்பல் ஒன்று அவர்களை குறி வைத்து கடத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளது.

சீனாவின் போலீஸ் துறை அல்லது வருமான வரித்துறை அதிகாரிகள் போல மாணவர்களை இந்த கும்பல் போனில் தொடர்பு கொள்ளும். பிறகு , நீங்கள் சீனாவில் குற்றமிழைத்து விட்டு இங்கே தப்பி வந்துள்ளீர்கள் ; உங்களை மீண்டும் நாடு கடத்தப் போகிறோம் என்று கூறி அந்த மாணவர்களை மிரட்டுவார்கள். இதனால், பயந்து போகும் மாணவர்களை ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு வர சொல்லும் அந்த கும்பல் அவர்களை காரில் கடத்தி சென்று ஏதாவது ஒரு  அறையில் அடைத்து வைத்து விடும்.

கடத்தப்பட்ட மாணவர்களை அரை நிர்வாணமாக்கி கயிற்றில் கட்டிப் போட்டு , மாணவரின் செல்போனிலேயே அந்த காட்சியை  காணொளியாக இந்த கும்பல் பதிவு செய்யும். பிறகு, அந்த காணொளியை சீனாவில் வசிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு கடத்தப்பட்டவரின்  செல்போனிலிருந்தே அனுப்பி வைக்க கூறுவார்கள். பிறகு, இரு நாள்களுக்கு , கடத்தப்பட்டவரின் செல்போனை இந்த கும்பல்  நிறுத்தி  வைத்து விடும்.

இதனால், தங்கள் பிள்ளைகளுக்கு என்னவோ… ஏதோவென்று பெற்றோர்கள் பயந்து போவார்கள். இரு நாள்களுக்கு பிறகு, கடத்தல் கும்பல் மீண்டும் மாணவனின் செல்போனில் இருந்தே பெற்றோரை தொடர்பு கொண்டு இவ்வளவு பணம் கொடுத்தால் விட்டுவிடுவோம் என்று மிரட்டுவார்கள். இந்தச் சூழலில் கேட்கும் பணத்தை கொடுக்க மாணவர்களின் குடும்பத்தினர் தயாராக இருப்பார்கள். இப்படி , சீன மாணவர்களை 8 பேரை கடத்திய மர்மக்கும்பல் இந்த ஆண்டில் மட்டும் 2.1 மில்லியன் அமெரிக்க டாலர்களை கறந்துள்ளது.

இதையடுத்து , சிட்னியில் படித்து வரும் சீன மாணவர்கள் கடும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென்று அந்த நகர காவல் துறை அறிவுறுத்தியுள்ளனர். போனில் உங்களுக்கு ஏதோவது மிரட்டல் வந்தால் உடனடியாக போலீசுக்கு தகவல் அளிக்க வேண்டுமென்று சீன மாணவர்களை அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.