அன்பு ரகுமான்… அஞ்ச வேண்டாம்

பாலிவுட்டில் தனக்கு வரும் பட வாய்ப்புகளை தடுக்க சதி நடப்பதாக ஏ.ஆர்.ரகுமான் கூறிய நிலையில், அவருக்கு ஆதரவாக வைரமுத்து டுவிட் செய்துள்ளார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், பாலிவுட்டில் தன்னை பணியாற்ற விடாமல் தடுக்க ஒரு கும்பல் வேலை செய்கிறது என்ற திடுக்கிடும் புகாரை தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆஸ்கார் விருது பெறுவதற்கு முன்புவரை 11 வருடங்களில் 33 இந்தி படங்களுக்கு இசையமைத்து வட இந்தியாவில் ஏ.ஆர்.ரகுமான் கொடி கட்டி பறந்தார்.
ஆனால் ஆஸ்கார் விருது பெற்ற பிறகு அவருக்கு பாலிவுட்டில் பட வாய்ப்புகள் குறைந்தன. பாலிவுட்டில் அவரது பட வாய்ப்புகளை தடுக்க சதி நடந்திருப்பது இப்போது அம்பலமாகி உள்ளது. சமூக வலைத்தளங்களில் ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவாக ரசிகர்கள் ஹேஷ்டேக் உருவாக்கி டிரெண்ட் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில், கவிஞர் வைரமுத்து இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “அன்பு ரகுமான் அஞ்சற்க. வட இந்திய கலையுலகம் தமிழ் நாட்டு பெண்மான்களை பேணுமளவுக்கு ஆண்மான்களை ஆதரிப்பதில்லை. இரண்டுக்கும் உயிர்வாழும் எடுத்துக்காட்டுகள் உண்டு. ரகுமான் நீங்கள் ஆண்மான்; அரிய வகை மான். உங்கள் எல்லை வடக்கில் மட்டும் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.