நீயா, நானா என்ற அரசியலாலேயே எமது சமூகம் பின்தங்கியுள்ளது

நீயா, நானா என்ற அரசியலாலேயே எமது சமூகம் பின்தங்கியுள்ளது எனவும் இந்த அரசியல் கலாசாரம் மாறவேண்டும் என்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

பத்தனை, கிறேக்கிலி தோட்டத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

மேலும், கொரோனா பிரச்சினையால் இன்று அனைத்து நாடுகளினதும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலைமை கட்டுப்படுத்தப்பட்ட பின்னர் பொருளாதாரம் மீண்டெழும். எமது நாட்டிலும் வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

இவ்வாறு பொருளாதாரம் மீண்டெழும்போது அதன் பங்காளிகளாக நாம் மாறவேண்டும். கிடைக்கும் வாய்ப்புகளை உரியவகையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கு நாம் தயாராக வேண்டும். ஒரு காலகட்டத்தில் எமது மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள்தான் இலங்கையின் பொருளாதாரத்துக்கு பெருமளவு பங்களிப்பை வழங்கினர்.

எனவே, தற்போது ஆயிரம் ரூபாய் தொடர்பாக மட்டும் பேசிக்கொண்டிருக்காது, சுற்றுலா அபிவிருத்தி குறித்தும் கவனம் செலுத்தி அந்தத் துறையில் எவ்வாறு பயன்பெறலாம், எமது இளைஞர்களுக்கு எவ்வாறு வேலை வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்கலாம் என்பது தொடர்பாக அவதானம் செலுத்தப்பட வேண்டும்.

நாட்டில், எதிர்காலத்தில் மரக்கறி வகைகளுக்கும் தட்டுப்பாடு ஏற்படக்கூடும். நுவரெலியா மாவட்டத்தில்தான் அதிகளவு மரக்கறி உற்பத்தி இடம்பெறுகின்றது. அப்போதும் எமக்கு வாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு கிடைக்கும் வாய்ப்புக்களைப் பயன்படுத்தி பொருளாதார ரீதியில் எம்மை பலப்படுத்திக்கொள்ள வேண்டும். இதற்கான களத்தை நாம் அமைத்துக்கொடுப்போம்.

எம்மை விமர்சிப்பவர்கள் திட்டங்களை முன்வைப்பவில்லை. விமர்சனங்களை மட்டுமே முன்வைக்கின்றனர். ஆரோக்கியமான விமர்சனங்களாக இருந்தால் ஏற்கலாம். ஆனால், இங்கு அர்த்தமற்ற விதத்திலேயே விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. நீயா, நானா என்ற அரசியலாலேயே நாம் பின்தங்கிய நிலையில் இருக்கின்றோம். இந்த அரசியல் கலாசாரம் மாறவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.