கொலை செய்யும் திட்டத்துடன் நடமாடிய சந்தேக நபர் கைக்குண்டுடன் கைது!

யாழில், ஒருவரை கொலை செய்யும் திட்டத்துடன் செயற்பட்ட சந்தேகநபரை யாழ் குற்றத்தடுப்பு காவல் துறை பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்ப்பட்ட நபர் பல்வேறு கொள்ளை மற்றும் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் என யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு காவல் துறையினர் தெரிவித்தனர்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வழிப்பறி, கொள்ளை மற்றும் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய 22 வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள நிலையில் குறித்த நபர் காவல் துறையால் தேடப்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், குறித்த நபர் வவுனியாவில் சங்கிலி அறுப்பு குற்றத்துக்கு 3 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவித்து வந்துள்ளார். இதற்கிடையே ; சந்தேக நபரின் மனைவி தென்மராட்சியைச் சேர்ந்த ஒருவருடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்.

தனது மனைவியை கொண்டு சென்றவரைக் கொலை செய்யும் நோக்குடன் சந்தேக நபர், உரும்பிராய் ஊடாக சாவகச்சேரிக்கு மற்றொருவருடன் பயணித்த போது, யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு காவல் துறை  பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் சந்தேக நபரின் இடுப்புப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டது.

அத்துடன், கொள்ளையிடப்பட்ட 16 பவுண் நகைகள் மீட்கப்பட்டதுடன், அவற்றை கொள்வனவு செய்த, உடமையில் வைத்திருந்த, விற்பனை செய்த குற்றச்சாட்டுக்களின் கீழ் 3 பெண்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

சந்தேக நபர்கள் விசாரணைகளின் பின்னர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள் என்று காவல் துறையினர்  தெரிவித்தனர்.