தந்தையைப்போல் இசையமைத்து அசத்திய ஏ.ஆர்.ரகுமான் மகள்

சுஷாந்த் சிங்கின் தில் பெச்சாரா பட பாடலுக்கு தனது மகள் இசையமைக்கும் காணொளியை ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டுள்ளார்.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14-ந் திகதி தற்கொலை செய்து கொண்டது, இந்திய திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரின் கடைசி படமான தில் பெச்சாரா வருகிற ஜூலை 24-ந் திகதி நேரடியாக ஓடிடி தளத்தில்வெளிவர உள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக டைட்டில் பாடல் மிகப்பெரிய ஹிட்டானது. இதனால் பிரபலங்களும், ரசிகர்களும் சுஷாந்த் சிங்கிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தில் பெச்சாரா படத்தின் டைட்டில் பாடலை பாடி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
ரஹீமா
அந்தவகையில்,  ஏ.ஆர் ரகுமானின் மகள் ரஹீமா ரகுமான் கீபோர்டில் அந்த பாடலை வாசிக்கும் காணொளி ஒன்றினை ஏ.ஆர். ரகுமான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஏ.ஆர் ரகுமானுக்கு கதிஜா, ரஹீமா என்ற 2 மகள்களும் மற்றும் அமீன் என்ற மகனும் உள்ளனர். அவர்களில் கதிஜா, எந்திரன் படத்தில் இடம்பெற்ற புதிய மனிதா பாடலை பாடியிருந்தார். அதே போல் மணிரத்னத்தின் ‘ஓ காதல் கண்மணி’ படத்தில் இடம்பெறும் மவுலா வா சலீம் என்ற பாடலை அமீன் பாடினார். தற்போது ரஹீமா தனக்கு இசை மீது ஆர்வம் இருப்பதை வெளிப்படுத்தி உள்ளார்.