ஆஸ்திரேலியாவில் உணவிற்கான உதவிகளை நம்பி 14 லட்சம் மக்கள்

கொரோனா பெருந்தொற்று சூழல் காரணமாக ஏற்பட்டுள்ள மந்தநிலையினால், உணவிற்கான உதவிகளை நம்பியிருக்கும் ஆஸ்திரேலியர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் அதிகரித்துள்ளது. இன்றைய சூழலில், ஆஸ்திரேலியாவில் 14 லட்சம் மக்கள் உணவிற்கான உதவிகளைப் பெறுகின்றனர். இதுவே பெருந்தொற்று சூழலுக்கு முன்னதாக சுமார் 8 லட்சம் மக்களே இந்த உதவிகளைப் பெற்றுள்ளனர்.

பெருந்தொற்று சூழலினால், உணவு உதவிகள் தேவைப்படுவோரின் எண்ணிக்கை 78 சதவீதம் அதிகரித்துள்ளது என கொரோனாவுக்கான ஆஸ்திரேலிய செனட் குழுவிடம் கூறியுள்ளார் ஆஸ்திரேலிய உணவு வங்கியின் தலைமை நிர்வாகி Brianna Casey. வெளிநாட்டு மாணவர்கள், தற்காலிக விசா கொண்டிருப்பவர்கள், வயதானவர்கள் உதவிகளை நாடுவது அதிகரிப்பதால் உதவிக் கோருபவர்களின் குறைவதற்கு சாத்தியக்கூறுகள் குறைவாகவே இருப்பதாகக் கூறப்படுகின்றது.

காட்டுத்தீ, வெள்ளம் இயற்கை பேரழிவுகள் நடந்து மீண்டுவரும் பகுதிகளில் உதவிக்கான தேவை அதிகம் இருப்பதாக தெரிவித்திருக்கிறார் Brianna Casey.

தங்கள் வாழ்வில் ஒருபோதும் உதவிகளை எதிர்ப்பார்த்து வாழ்ந்திடாதவர்கள் கூட உணவு மற்றும் பொருளாதார உதவிகளை நாட வேண்டிய நிலை ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. இந்த நிலையில் ஆஸ்திரேலியர்கள் பெருமளவில் Superannuation சேமிப்பை எடுக்க முயன்றதால் ஆஸ்திரேலிய வரிவிதிப்பு அலுவலக இணையதளம் முடங்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

ஆஸ்திரேலியாவின் Jobseeker உதவித்தொகையின் கீழ் 17 லட்சத்திற்கும் அதிகமானோரும் JobKeeper ஊதிய மானியத்திற்கு கீழ் 33 லட்சம் பேரும் உதவிப் பெறுவதாகக் கூறப்படும், இந்த உதவிகளின் கீழ் உதவிப் பெறாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதாக சொல்லப்படுகின்றது.

கடந்த ஆண்டு இதே நேரத்தில் 620 தற்காலிக விசா கொண்டிருந்தவர்கலை உதவிகளை வழங்கியிருந்த செஞ்சிலுவை சங்கம், இந்த ஆண்டு வேலையிழந்த, உதவித்தொகையில் உள்ளடக்கப்படாத 14 ஆயிரம் பேருக்கும் அதிகமானோருக்கு உதவுவதாகத் தெரிவித்துள்ளது.