உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்று லண்டனில் தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்ட பெண்

லண்டனின் தேவாலயத்தில் இலங்கையின் உயிர்த்த ஞாயிறு பாணியில் தாக்குதலொன்றை மேற்கொள்ள திட்டமிட்டிருந்ததாக பிரிட்டனின் முதல் பெண்தற்கொலை குண்டுதாரி என கருதப்படுபவர் காவல் துறையினர் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

சாபியா சைக் என்ற 36 வயது பெண் பிரிட்டனின் புலனாய்வு பிரிவை சேர்ந்தவர்களிடம் அவர்கள் யார் என தெரியாத நிலையில் இதனை தெரிவித்துள்ளார்.

சிறிய வரலாறு ஒன்றை உருவாக்க விரும்புகின்றேன் தலைநகரில் ஒரு பயங்கரமான நாளில் என்னால் முடிந்த எத்தனை பேரை கொலை செய்யமுடியுமோ அத்தனை பேரை கொலை செய்ய விரும்புகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருளிற்கு அடிமையாகியிருந்த போதிலும் அவர் ஏதாவது பெரிதாக செய்ய விரும்புகின்றேன் ஒருவரை மாத்திரம் கொலை செய்வது போதாது என குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு குண்டுகளை வெடிக்கவைத்த பின்னர் தான் தன்னை லண்டனின் புகையிரதநிலையத்தில் வெடிக்க வைக்க விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆம் நான் இதனையே விரும்புகின்றேன் சகோதரரே நான் பலரை கொலை செய்ய விரும்புகின்றேன்,பிரிட்டனின் புலனாய்வு துறையை சேர்ந்த ஒருவரிடம் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சென்போல் கதீட்டிரலில் சார்ல்ஸ் டயனா திருமணம் இடம்பெற்ற படத்தை காண்பித்துள்ள அவர் தேவாலயத்தை குண்டுவைத்து தகர்ப்பதற்கான தனது விருப்பத்தை வெளியிட்டுள்ளார்.

நான் இதற்கு திட்டமிட விரும்புகின்றேன்,நான் உண்மையாகவே இது குறித்து தீவிரமாக உள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் கவரப்பட்டிருந்த அவர் தேவாலயத்தில் பெருமளவு மக்கள் காணப்படும் வேளை நான் தாக்குதலை மேற்கொள்ள விரும்புகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட பின்னர்  காவல் துறையின்  விசாரணையின் போது தான் தாக்குதலிற்கு திட்டமிட்டதை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

இலங்கையில் நடந்தது எனக்கு மிகவும் பிடிக்கும் என குறிப்பிட்டுள்ள அவர் இலங்கையில் நடந்ததை போல நான் தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.