தமிழ் தாய் ஒருவர் தன் மகளை கத்தியால் குத்திவிட்டு, தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம்

லண்டனில் இலங்கையை சேர்ந்த தமிழ் தாய் ஒருவர் தன் மகளை கத்தியால் குத்திவிட்டு, தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் மிற்சம் என்ற பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்று சுமார் 5 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவர் கத்திக்குத்து காயங்களுடன் உயிரிழந்துள்ளதாகவும் அவரின் தாயார் உயிருக்கு போராடி வருவதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.

இவ்வாறு உயிரிழந்த சிறுமி 5 வயதுடைய சாயகி கருணாநந்தம் எனவும் காயங்களுடன் வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் உயிருக்காகா போராடிவரும் தாயார் 35 வயதுடைய சுதா கருணாநந்தம் எனவும் தெரியவருகின்றது.

இந்த சம்பவம் குறித்து அயலவர்கள் கூறுகையில்,

சம்பவம் இடம்பெற்ற குறித்த வீட்டில் இருந்து சிறுவன் ஒருவன் ஆம்புலன்சிற்காக வெளியே அழுது கொண்டே ஓடிவந்ததாக கூறியுள்ளனர்.

என்.ஹெச்.எஸ் வைத்தியசாலையில் மருத்துவ உதவியாளரான 47 வயதுடைய பெண், உதவ ஓடிய போது, வீட்டில் இறந்து கிடந்த மகளுக்கு அருகில் தயாரான சுதா கருணாரத்தனம் இரத்த வெள்ளத்தில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ளார்.

குழந்தை மீது போர்வை போர்த்தப்பட்டிருந்தது. என்னை பொறுத்தவரை அவள் அப்போதே இறந்துவிட்டாள். அவளை நன்றாக கவனித்த போது, தொண்டையில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன.

இது பார்க்கும் போது ஒரு அதிர்ச்சியூட்டுவதாகவும் ஒரு காட்டுமிராண்டித்தனமான செயலாகவும் இருந்ததாக கூறியுள்ளார்.

அருகில் வசிக்கும் 55 வயதுடைய மற்றொரு அயலவரான நபர் ஒருவர் கூறுகையில்,

இறந்து கிடந்த சிறுமியின் சடலத்திற்கு சற்று தொலைவில், 12 அங்குலம் கொண்ட கத்தியை அவதானித்தேன்.
முதலில் நான் அவள் தூங்குகிறாள் என்று நினைத்தேன், ஆனால் படுக்கைக்கு அருகில் இரத்தம் தோய்ந்திருந்தது. இதைக் கண்டதால் நாள் முழுவதும் இதை நினைத்து பயத்தால் நடுங்கினேன் என்று கூறியுள்ளார்.

இவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள், ஐந்து ஆண்டுகளாக குறித்த குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர்.

காவல் துறை இந்த சம்பவம் குறித்து கூறுகையில்,

இது தொடர்பாக விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. சுதா கருணாநந்தம் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்

இந்த சம்பவம் தொடர்பாக நாங்கள் வேறு யாரையும் சந்தேகத்தில் தேடவில்லை, குடும்பத்தின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த குழந்தைக்கு பிரேத பரிசோதனை நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்.

மகளை கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்ற சுதா கருணாநந்தம் என்ற தாயாருக்கு ஆண், பெண் என இரண்டு பிள்ளைகள் என்பதால், அழுது கொண்டே ஒடி வந்தது, அவரின் மகனாக இருக்கலாம் என்று என்று கூறப்படுகிறது.