2023 பெண்கள் உலககோப்பை கால்பந்து – போட்டி நடத்தும் உரிமையை பெற்றன ஆஸ்திரேலியா, நியூசிலாந்து

சர்வதேச கால்பந்து சம்மேளனம் சார்பில் 2023-ம் ஆண்டு பெண்களுக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் உரிமையை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் பெற்றுள்ளன.

சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) சார்பில் பெண்களுக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடத்தப்படுகின்றன. அவ்வகையில் 2023-ம் ஆண்டின் உலகக்கோப்பை தொடரை நடத்துவதற்கு பல்வேறு நாடுகள் விண்ணப்பித்திருந்தன.

இதுதொடர்பாக நேற்று சூரிச்சில் நடந்த பிபா கவுன்சில் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

உலகக் கோப்பையை நடத்தும் அணிகளை தேர்வு செய்ய வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா மற்று நியூசிலாந்து அணிகளுக்கு ஆதரவாக 22 வாக்குகளும், கொலம்பியாவுக்கு ஆதரவாக 13 வாக்குகளும் கிடைத்தன.

இதையடுத்து, 2023-ம் ஆண்டு பெண்களுக்கான உலகக் கோப்பை தொடரை நடத்தும் உரிமையை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது.

2020 ம் ஆண்டு 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான உலகக்கோப்பை போட்டியை நடத்தும் உரிமையை இந்தியா பெற்றிருந்தது. ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.