சினமன் கிராண்டில் தற்கொலை தாக்குதலை மேற்கொண்டவர் குறித்து சிஐடியினர் தெரிவித்திருப்பது என்ன?

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் தாக்குதலை மேற்கொண்ட நபர் ஜனவரி முதல் ஏப்பிரல் வரையிலான காலப்பகுதியில் 45 மில்லியனை செலவு செய்தார் என சிஐடி அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

சினமன் கிராண்டில் தற்கொலை குண்டுதாக்குதலை மேற்கொண்ட இன்சாவ் இப்ராஹிம் முதல் நான்கு மாதங்களில் 45 மில்லியனை செலவிட்டுள்ளார், தீவிரவாதத்தினை ஊக்குவிப்பதற்காக இந்த பணத்தினை அவர் செலவிட்டுள்ளார் என சிஐடி அதிகாரியொருவர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு முன்னர் பதிவுசெய்யப்பட்ட இன்சாவின் குரல்பதிவுகளை ஆணைக்குழுவின் முன்னிலையில் சிஐடியினர் வெளியிட்டுள்ளனர்.

ஒரு வீடியோவில் தனது குடும்பத்தினர் மலேசியா செல்வதற்கான ஏற்பாடு செய்துள்ளேன் என தெரிவிக்கும் அவர் அதன் காரணமாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களிற்கு பின்னர் இடம்பெறும் ஒடுக்குமுறைகளில் இருந்து தனது குடும்பத்தவர்கள் தப்பிக்கலாம் என அவர் தெரிவிக்கின்றார்.

பிள்ளைகளுடன் வாழ்வதற்கு இலங்கை பாதுகாப்பானதல்ல என கருதினால் மனைவியை வெளிநாடு செல்லுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளமையும் குரல் பதிவின் மூலம் தெரியவந்துள்ளது.

பென்டிரைவ் ஒன்றில் இன்சாவ் நான்கு குரல் பதிவுகளை சேமித்து வைத்திருந்தார் அதில் தான் ஏன் தற்கொலை குண்டுதாரியாக மாறினார் என தெரிவித்துள்ளார் என ஆணைக்குழுவின் முன்னிலையில் தெரிவித்துள்ள சிஐடியினர் தனது சொத்துக்களை மனைவி எவ்வாறு கையாளவேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார் என தெரிவித்துள்ளனர்