எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் சாதனை பெண்மணி மரணம்

எவரெஸ்ட் மலையின் சிகரத்தை அடைந்த முதல் சாதனை பெண்மணியான ஜப்பானின் ஜூன்கோ தாபெய், தன்னுடைய 77-வது வயதில் இறந்துள்ளார்.

புற்றுநோயால் அவதியுற்ற அவர் வியாழக்கிழமை இறந்ததாக அவருடைய குடும்பத்தினர் தெரிவித்திருக்கின்றனர்.

எட்மன்ட் ஹிலரியும், டென்சிங் நோர்கேயும் உலகிலேயே மிகவும் உயரமான மலை சிகரத்தை சென்றடைந்த முதல் ஆண்கள் என்ற சாதனை பதிவுக்கு 22 ஆண்டுகளுக்கு பிறகு, 1975 ஆம் ஆண்டு ஜூன்கோ தாபெய் எவரஸ்ட் சிகரத்தை அடைந்தார்.

அவர் ஏறிய பிற முக்கிய மலை சிகரங்களில், ஆப்ரிக்காவிலுள்ள கிளிமாஞ்சாரோவும், அண்டார்டிகாவிலுள்ள வின்சன் மஸ்சிஃப்பும் அடங்குகின்றன.

உயர்நிலை பள்ளி மாணவர்களுடன் ஜப்பானின் நடுவிலுள்ள ஃபியுஜி மலை சிகரத்தை அடைந்தது தான் ஜூலை மாதத்தில் அவருடைய கடைசி மலையேறிய முயற்சியாக அமைந்தது.