சிவகுமாரின் 75-வது பிறந்த நாள் சிறப்பு ஓவியக் கண்காட்சி

தந்தை சிவகுமாரின் 75வது பிறந்த நாளை, சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் பிரம்மாண்டமாக கொண்டாட திட்டமிட்டு இருக்கிறார்கள்.

1965ம் ஆண்டு ‘காக்கும் கரங்கள்’ மூலமாக தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் சிவகுமார். அதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் நாயகனாக நடித்தார். வரும் அக்டோபர் 27ம் தேதி தனது 75வது வயதில் அடியெடுத்து வைக்கிறார் சிவகுமார்.

இதனை சிவகுமாருடைய மகன்களான சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் ‘மார்க்கண்டேயனுக்கு வைரவிழா’ என்ற தலைப்பில் பிரம்மாண்டமாக கொண்டாட திட்டமிட்டு இருக்கிறார்கள்.

சிவகுமார் வரைந்துள்ள பல்வேறு ஓவியங்களில் இருந்து 140 ஒவியங்களைத் தேர்ந்தெடுத்து லலித் கலா அகாடமியில் ஓவியக் கண்காட்சி நடத்தப்பட இருக்கிறது. இக்கண்காட்சி 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது.

அக்டோபர் 27ம் தேதி வைரவிழா மலர் வெளியிடப்படுகிறது. அதில் நடிகர்கள் ரஜினி, கமல் உட்பட சிவகுமாருடன் நடித்தவர்களின் அனுபவங்கள் இடம்பெற இருக்கிறது. இதில் சிவகுமார் நடித்த படங்களின் குறிப்புகள், புகைப்படங்கள் ஆகியவை இடம்பெற இருக்கிறது. மேலும், அவருடைய சொற்பொழிவுகள் அடங்கிய டிவிடிக்களும் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.7