வல்வையில் குண்டு வெடிப்பு ! இராணுவ அதிகாரி காயம்!

நெல்லியடி காவல் துறை  பிரிவுக்கு உட்பட்ட வல்லைவெளிப் பகுதியில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த இராணுவ அதிகாரி ஒருவர் வெடிபொருள் என்று நம்பப்படும் மர்மப் பொதி ஒன்று வெடித்ததில் காயம் அடைந்துள்ளார். நேற்று மாலை இடம்பெற்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வல்லைவெளி இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவ அதிகாரி ஒருவரும் இராணுவச் சிப்பாய்கள் இருவரும் நேற்று மாலை 6.30 மணியளவில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அவ்வேளை மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் ஒருவர் பொதி ஒன்றை விழுத்திவிட்டுச் சென்றிருக்கின்றார்.

அதனை அவதானித்த இராணுவ அதிகாரி, பொதியை பிரிக்க முற்பட்ட போது அது வெடித்துச் சிதறியுள்ளது. காயமடைந்த அவர் இராணுவத்தினரின் முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.