கரோனா தனிமைக் காலம் நிறைவு: போனி கபூர் உற்சாகம்

கரோனா அச்சுறுத்தலால் 14 நாட்கள் தனிமையில் இருந்ததாகவும், தற்போது அது முடிவடைந்ததாகவும் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார்.

இந்தியத் திரையுலகின் முன்னணித் தயாரிப்பாளராக வலம் வருபவர் போனி கபூர். இவர் மறைந்த நடிகர் ஸ்ரீதேவியின் கணவர். போனி கபூர் – ஸ்ரீதேவி தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இதில் ஜான்வி கபூர் மட்டும் இந்தித் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

கரோனா அச்சுறுத்தலால் தனது மகளுடன் வீட்டிலிருந்தார் போனி கபூர். அப்போது அவருடன் பணிபுரிந்த பணியாளர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து போனி கபூர் குடும்பத்தினருடன் தனிமைப்படுத்தப்பட்டார்.

தனிமைக் காலம் முடிந்திருப்பதைத் தொடர்ந்து போனி கபூர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“எனக்கும் என் மகள்களுக்கும் கரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட எங்கள் ஊழியர்கள் மூவரும் தற்போது முற்றிலுமாக குணமடைந்துவிட்டனர். எங்களுடைய 14 நாட்கள் தனிமைக் காலமும் முடிந்துவிட்டது. ஒரு புதிய தொடக்கத்துக்காக நாங்கள் காத்திருக்கிறோம்.

கரோனா சிகிச்சையில் இருக்கும் அனைத்து மக்களும் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறோம். அரசு அறிவுறுத்தியுள்ள வழிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்றுமாறு உங்களை வலியுறுத்துகிறோம். எங்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டுக்கும், மகாராஷ்டிராவுக்கும் உதவும் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், மும்பை மாநகராட்சி, மும்பை காவல்துறை, மத்திய அரசு ஆகியோருக்கு நானும் என் குடும்பமும் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். கரோனா வைரஸை நாம் ஒன்றிணைந்து வெல்வோம்”. இவ்வாறு போனி கபூர் தெரிவித்துள்ளார்.

‘நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து தமிழில் அஜித் நடித்து வரும் ‘வலிமை’ படத்தை போனி கபூர் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.