ஈழத்தை  பூர்வீகமாகக் கொண்ட வைத்தியர் – வட அயர்லாந்தைச் சேர்ந்த தாதிக்கும் திருமணம்

பிரிட்டன் நாட்டின் மத்திய லண்டன் பகுதியில் செயின்ட் தாமஸ் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் வைத்தியராக பணிபுரிபவர் ஈழத்தை  பூர்வீகமாகக் கொண்ட அன்னாலன் நவரத்தினம். இதே மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிபவர் ஜான் டிப்பிங். இவர் வட அயர்லாந்தைச் சேர்ந்தவர்.

இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இரு வீட்டாரிடமும் திருமணத்துக்கு சம்மதம் பெற்ற நிலையில் வரும் ஆகஸ்ட்மாதம் திருமணம் நடைபெறவிருந்தது. ஆனால் கரோனா பிரச்சினையால் கடந்த மார்ச் 23-ம் திகதி முதல் பிரிட்டனில் ஊரடங்கு உத்தரவு உள்ளது. எனவே, இருவருடைய பெற்றோரும் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இருவரும் மருத்துவமனை வளாகத்தில் உள்ள தேவாலயத்தில் திருமணம் செய்ய முடிவெடுத்தனர். அதன்படி கடந்த ஏப்ரல் 24-ம் திகதி தேவாலயத்தில் எளிய முறையில் திருமணம் நடைபெற்றது.

இதுகுறித்து ஜான் டிப்பிங் கூறும்போது, “எங்களது திருமண வீடியோ, புகைப்படங்களை மெயில் மூலமாகவும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் அனுப்பினோம்” என்றார்.

ஏப்ரல் 24-ல் நடந்த திருமண நிகழ்ச்சி புகைப்படங்களை மருத்துவமனை நிர்வாகம் 2 நாட்களுக்குமுன்பு ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. இந்த புகைப்படத்துக்கு 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ‘லைக்’ போட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.