சீன நாடாளுமன்றத்தில் நிறைவேறியது புதிய பாதுகாப்பு சட்டமூலம்

சீன நாடாளுமன்றம் ஹொங்கொங்கிற்கான புதிய பாதுகாப்புச் சட்டமூலத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
ஹொங்கொங், சீனாவின் ஆளுகையின் கீழ் உள்ள ஒரு தன்னாட்சிப் பிரதேசமாகும். அங்கே வெளியுறவு, இராணுவம் ஆகிய இரு துறைகளையும் சீனா கட்டுப்படுத்தும். ஏனைய அனைத்துத் துறைகளையும் ஹொங்கொங் அரசே நிர்வகிக்கும்.

70 லட்சம் மக்கள் தொகையை கொண்ட ஹொங்கொங் பல தசாப்த காலமாக இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்து வந்தது. 1997 ஆம் ஆண்டு ஹொங்கொங்கை, இங்கிலாந்து சீனாவிடம் ஒப்படைத்தது.

அந்தநாள் முதல் இன்று வரை ஹொங்கொங், சீனாவின் காட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. சீனாவின் அடக்குமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஜனநாயக உரிமைகள் கோரியும் பல ஆண்டுகளாக ஹொங்கொங் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சீனாவிடம் இருந்து கூடுதல் ஜனநாயக உரிமைகள் கோரி ஜனநாயக ஆர்வலர்களின் தொடர் போராட்டத்தை சீனா இரும்பு கரம் கொண்டு ஒடுக்கியது.

இந்த நிலையில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்த கையோடு ஹொங்கொங் மீதான தனது பிடியை இறுக்கும் விதமாக புதிய தேசிய பாதுகாப்பு சட்டமூலத்தை அமுல்படுத்தும் முயற்சியில் சீனா இறங்கியுள்ளது.