அதை அவர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும் – வித்யா பாலன்

தற்காலிகமானது தான்… அதை அவர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும் என்று பிரபல நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.

கொரோனா ஊரடங்கினால் திரையுலகம் முடங்கி உள்ளது. தியேட்டர்கள் மூடிக்கிடக்கின்றன. இதனால் திரைப்படங்களை தயாரிப்பாளர்கள் நேரடியாக இணையதளத்தில் வெளியிட முன்வந்துள்ளனர். இதனை தியேட்டர் அதிபர்கள் எதிர்க்கின்றனர். இதுகுறித்து வித்யாபாலன் அளித்துள்ள பேட்டி வருமாறு:-

“கொரோனா ஊரடங்கால் படங்களை தியேட்டர்களில் திரையிட முடியாமல் 2 மாதங்களுக்கு மேலாக காத்திருக்கின்றனர். இதனால் புதிய படங்களை இணையதளத்தில் வெளியிட சிலர் முன் வந்துள்ளனர். இப்போதுள்ள நிலைமையில் சினிமா படங்களை தியேட்டர்களில் வெளியிட வாய்ப்பே இல்லை. வேறு வழி இல்லாமல்தான் இணையதளத்தில் வெளியிட வேண்டிய நிலைமை ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலைமையை தியேட்டர் உரிமையாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தியேட்டர்கள் திறந்ததும் எப்போதும் போலவே நிலைமை மாறி விடும். அப்போது படங்களெல்லாம் தியேட்டர்களுக்கு வரும். தியேட்டர்களில் படங்கள் பார்ப்பதைத்தான் எல்லோரும் விரும்பவும் செய்வார்கள். ஆனால் வேறு வழி இல்லாமல் தற்போது நிலவும் விசித்திரமான சூழ்நிலையில் ஓ.டி.டி. மாதிரி ஒரு சாதனம் படங்கள் ரிலீசுக்கு பயன்பட்டு இருப்பது ஒரு நல்ல விஷயம்.

ஓ.டி.டி.யில் சினிமா படங்கள் வெளியாவது தற்காலிகமானதுதான். அதை தியேட்டர் உரிமையாளர்கள் உணர்ந்து ஒத்துழைப்பு தர வேண்டும்”.

இவ்வாறு வித்யாபாலன் கூறியுள்ளார்.